Last Updated : 16 Sep, 2020 04:03 PM

 

Published : 16 Sep 2020 04:03 PM
Last Updated : 16 Sep 2020 04:03 PM

விவசாயிகளின் நலனுக்காக கொண்டுவந்துள்ள 3 மசோதாக்களிலும் காங்கிரஸ் அரசியல் செய்கிறது: ஜே.பி. நட்டா குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலனுக்காகவும், அவர்களின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கவும், உற்பத்தியைப் பெருக்கவும் 3 புதிய மசோதாக்களை மத்திய அரசு தொலைநோக்குப் பார்வையுடன் அறிமுகம் செய்துள்ளது. ஆனால், இதற்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை போடுகிறது என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா குற்றம் சாட்டினார்.

மத்திய அரசு வேளாண் தொடர்பான 3 மசோதாக்களை திங்கள் கிழமை அன்று மக்களவையில் அறிமுகம் செய்தது. இதன்படி, விவசாயிகள் பொருட்கள் வர்தத்கம் மற்றும் வியாபார மசோதா, விவசாயிகளுக்கு அதிகாரம் மற்றும் பாதுகாப்பு மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை கொண்டுவரப்பட்டன. இதில் அத்தியாவசியப் பொருட்கள் மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ளது.

ஆனால், இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானது எனக் கூறி எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. பாஜககூட்டணியில் உள்ள சிரோன் மணி அகாலிதளமும் மக்களவையில் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தது.

இந்நிலையில் இதுகுறித்து பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா இன்று பாஜக தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''விவசாயிகளின் நலனுக்காக இந்த 3 மசோதாக்களையும் தொலைநோக்குடன் மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. விவசாயிகளுக்கு அதிகாரத்தை அளிக்கும் இந்த மசோதாக்கள் உண்மையில் புரட்சியை ஏற்படுத்தும். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை போட்டியில் இருக்கும் எந்தச் சந்தையிலும் விற்பனை செய்ய முடியும்.

ஆனால், இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்புத் தெரிவிக்கிறது. விவசாயிகளின் அனைத்து விதமான வளர்ச்சி, மேம்பாட்டையும் அந்தக் கட்சி சீரழித்துவிட்டது.

காங்கிரஸ் கட்சி இரு நிலைப்பாட்டுடன் பேசுகிறது. இந்த மசோதாக்கள் மூலம் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். வேளாண் துறையில் நல்ல முதலீடு செய்யப்படுவதால், அந்தத் துறை ஊக்கம் பெறும்.

வேளாண் துறையின் கண்ணோட்டத்தில் இந்த மசோதா மிகவும் நன்மை தரக்கூடியது. அத்தியாவசியப் பொருட்கள் மசோதாவால் கடந்த 1955-ம் ஆண்டிலிருந்து உணவு தானியங்கள் பற்றாக்குறையாகவே இருக்கின்றன.

கடந்த 1955-ல் ஒரு கோடி டன் உணவு கோதுமை உற்பத்தி செய்யப்பட்டது. இப்போது 10 மடங்கு உற்பத்தி உயர்ந்துள்ளது. 1955-ல் அரிசி உற்பத்தி 2.50 கோடி டன் இருந்தது. இப்போது 110 மில்லியன் டன்னாக இருக்கிறது. இருப்பினும் உணவுப் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது அவசியம். சரியான விலையில் விற்கப்படும்போது பதுக்கலுக்கு வழியிருக்காது.

இப்போதுள்ள நிலையில், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை மண்டிகள் மூலம்தான் விற்பனை செய்கிறார்கள். இந்த மசோதாக்கள் மூலம், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை மண்டிகளைக் கடந்து தங்களுக்கு லாபமான விலையில் விற்கலாம்.

விவசாயிகள் தங்களின் விளைபொருட்களுக்கு எங்கு நல்ல விலை கிடைக்கிறதோ அங்கு விற்கலாம். இந்த மசோதாவில் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய செயல்பாடு இருக்கிறது. விலையை விவசாயிகள் அறிந்துகொள்ள முடியும்.

இந்த 3 மசோதாக்களும் விவசாயிகளின் நலனுக்கானது. விவசாயிகளுக்கும், சந்தைக்கும் இடையிலான தடைகள் அனைத்தும் நீக்கப்படும். காங்கிரஸ் இந்த மசோதாவை எதிர்க்கிறது என்றால், அதற்கு இரட்டை முகம் இருக்கிறது. அனைத்திலும் எப்போதுமே அந்தக் கட்சி அரசியல் செய்கிறது.

எதிர்க்கட்சிகள் தங்களின் தேர்தல் வாக்குறுதியில் கூறியதை இப்போது பாஜக அரசு நிறைவேற்றுகிறது. இந்த மசோதாவுக்கு சிரோன் மணி அகாலி தளம் கட்சி எதிர்ப்புத் தெரிவித்தாலும் அந்தக் கட்சியின் கவலைகள் கேட்கப்பட்டு நிவர்த்தி செய்யப்படும்''.

இவ்வாறு ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x