Last Updated : 16 Sep, 2020 08:21 AM

 

Published : 16 Sep 2020 08:21 AM
Last Updated : 16 Sep 2020 08:21 AM

ஆதரவற்ற, வீடுகளற்ற 1.27 கோடி பேருக்கு லாக்டவுன் காலத்தில் சமைக்கப்பட்ட உணவு வழங்கப்பட்டது: மத்திய சமூக நீதித்துறை தகவல்

ஆதரவற்ற மற்றும் வீடுகளற்று சாலையில் வசிப்போர், யாசகம் செய்வோர் என 1.27 கோடி பேருக்கு கரோனா பரவலைத் தடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட லாக்டவுன் காலத்தில் சமைக்கப்பட்ட உணவு வழங்கப்பட்டது என்று மத்திய சமூக நீதித்துறை மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் மக்களவையில் நேற்று தெரிவித்தார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து மத்திய சமூக நீதித்துறை மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் கிருஷ்ணபால் குர்ஜார் பேசுகையில், “மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, உருவாக்கிய திட்டத்தின் கீழ் சாலையில் பிச்சை எடுப்போர், ஆதரவின்றி சாலையில் தங்கி இருப்போர் ஆகியோரின் மறுவாழ்வு, மருத்துவ வசதிகள், கவுன்சிலிங், கல்வி, மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றுக்காகத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டங்கள் சோதனை முயற்சியாக 10 நகரங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, லக்னோ, பாட்னா, நாக்பூர், இந்தூர் ஆகிய நகரங்களில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களுக்காக ஹைதராபாத்தில் ரூ.2 கோடி, இந்தூரில் ரூ.1.50 கோடி, பாட்னாவில் ரூ.1.50 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி வெளியிட்டபின் அந்த நகரங்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் மூலம் அந்த நகரங்களில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பிச்சை எடுப்போர், சாலையில் ஆதரவின்றி இருப்போர் ஆகியோருக்கு இலவசமாக சமைக்கப்பட்ட உணவுகள் வழங்கக் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படி 1.27 கோடி பேருக்கு கரோனா லாக்டவுன் காலத்தில் சமைக்கப்பட்ட உணவு வழங்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவு தானியங்கள் குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை இணையமைச்சர் தான்வே ராவ் சாஹிப் தாதாராவ் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

“புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக மத்திய அரசு கடந்த மே, ஜூன் மாதங்களில் 8 லட்சம் டன் தானியங்களை மத்திய அரசு ஒதுக்கியிருந்தது.

புலம்பெயர் தொழிலாளர்களைக் கணக்கெடுக்கும் பணி மாநில அரசுகளிடம் வழங்கப்பட்டது. இதன்படி 2.8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு தானியங்கள் ஒதுக்கப்பட்டன. 2 மாதங்களில் 2.67 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டன.

இந்தத் திட்டத்தின் மூலம் 95 சதவீத புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயன் பெற்றுள்ளனர். இரு மாதங்களில் 2.67 லட்சம் டன் உணவு தானியங்கள் வழங்கப்பட்டன” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x