பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் ஊழல் புகார்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்- மக்களவையில் காங்கிரஸ் வலியுறுத்தல்

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் ஊழல் புகார்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்- மக்களவையில் காங்கிரஸ் வலியுறுத்தல்
Updated on
1 min read

பிரதமரின் விவசாயிகள் நிதி யுதவி திட்டத்தில் தமிழகத்தில் நடைபெற்ற ஊழல் பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. அக்கட்சியின் கரூர் தொகுதி எம்.பி.யான எஸ்.ஜோதிமணி இப்பிரச்சினையை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 2-வது நாளில் எழுப்பினார்.

இதுகுறித்து மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தின்போது நேற்று ஜோதிமணி எம்.பி பேசியதாவது:

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கிழ் தமிழகத்தில் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல் நடைபெற்றுள்ளது. லட்சக்கணக்கான தகுதியுள்ள விவசாயிகளுக்கு இந்த நிதியுதவி கிடைக்கவில்லை. ஆனால்,5 லட்சத்துக்கும் மேற்பட்ட போலிபயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ள னர். இந்த ஊழலில் அதிகாரிகள் மட்டுமே பலிகடாவாக ஆக்கப் பட்டு உள்ளனர். ஆளும் அதிமுக அரசுக்கு தெரியாமல் இந்த ஊழல் நடந்திருக்க வாய்ப்பில்லை. இந்த மாபெரும் ஊழலை வெளிக் கொண்டுவர உடனடியாக சிபிஐவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இத்துடன் தமிழக பாஜகவின் நடவடிக்கைகளையும் காங்கிரஸ் எம்.பி.யான ஜோதிமணி அப்போது விமர்சித்தார். அதில் அவர், தமிழக பாஜக பல்வேறு அரசு திட்டங்களை பகிரங்கமாகவே கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இது எவ்விதத் திலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தல்ல என்றும் குறிப்பிட்டார்.

நடிகர் சூர்யா விவகாரம்

நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யாகூறிய கருத்துகளும் நேற்று மக்களவையின் முன் வைக்கப்பட்டன. இவற்றை சுட்டிக்காட்டியமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்சு.வெங்கடேசன், நீட்தேர்வைரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினார்.

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்

இதுகுறித்து மதுரை தொகுதி எம்.பி.யான சு.வெங்கடேசன் கூறும்போது, "மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக தமிழக சட்டப்பேரவை ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை குடியரசுத்தலைவர் திருப்பி அனுப்பினார். அரசமைப்பு சட்டத்தின்படி மசோதாவை திருப்பி அனுப்பினால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். ஆனால் இன்றுவரை அந்த காரணம் தெரிவிக்கப்படவில்லை.

இதுபற்றி நீதித் துறை ஆளுமைகள் கேள்வி எழுப்புவதில்லை. ஆனால் திரைக்கலைஞர் சூர்யா கருத்து கூறினால் உடனே எதிர்வினை புரிகிறார்கள். நீதியும்,தேர்வும், மனுநீதியின் சாயலாகவும், சாரமாகவும் மாறிவிடக்கூடாது என்பதால் கேட்கிறோம். நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in