Published : 16 Sep 2020 07:58 AM
Last Updated : 16 Sep 2020 07:58 AM

மகாராஷ்டிரா நற்பெயருக்கு சமூக ஊடகங்களில் களங்கம்: சிவசேனா கட்சி புகார்

மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சமூக ஊடகங்கள் திட்டமிட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று ஆளும் சிவசேனா கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

இதுகுறித்து சிவசேனாவின் ‘சாம்னா’ இதழில் நேற்று வெளியான தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த 5-6 ஆண்டுகளில் வதந்தி என்ற பெயரில் இழிவுபடுத்தும் கருத்துகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அதற்குஎந்த கட்டுப்பாடும் இல்லை. மகாராஷ்டிராவும் இதுபோன்ற சூழலை கடந்த சில நாட்களாக அனுபவித்து வருகிறது. மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக சமூக ஊடகங்கள் திட்டமிட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இதுபோன்ற வதந்திகளுக்கு யாராவது தங்கள் பாணியில் பதில் அளித்தால், பிறகுஒருவரின் கருத்து சுதந்திரம்குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.

நீதிபதிகள் தங்கள் சுய பாதுகாப்புக்காக பேசுவதிலிருந்து சுய கட்டுப்பாட்டை கடைப்பிடித்து வருவதால் அவர்கள் சமூக ஊடகங்களில் வதந்திகள் மற்றும் அவதூறுகளுக்கு ஆளாகி வருகின்றனர் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா அண்மையில் கூறினார். நீதிபதி ரமணா கூறியது உண்மையே. இது கிட்டத்தட்ட அனைத்து துறைகளுக்கும் பொருந்தும். நீதிபதி ரமணா கூறியதை புரிந்துகொள்ளும் முதிர்ச்சியை சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் காண்பித்தால் அது வியப்புக்குரியதாகவே இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவின் கேலிச் சித்திரத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்த கடற்படை முன்னாள் அதிகாரி ஒருவர் மும்பையில் அண்மையில் சிவசேனா தொண்டர்களால் தாக்கப்பட்டார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீராக மும்பை மாறிவிட்டது என நடிகை கங்கனா ரனாவத் அண்மையில் கூறியதைத் தொடர்ந்து அவருடன் சிவசேனா வார்த்தைப் போரில் ஈடுபட்டது. இந்தச் சூழ்நிலையில் சிவசேனா இவ்வாறு கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x