Published : 15 Sep 2020 08:59 PM
Last Updated : 15 Sep 2020 08:59 PM

கேரளாவில் இன்று 3,215 பேருக்குக் கரோனா; 12 பேர் மரணம்: முதல்வர் பினராயி விஜயன் தகவல் 

கேரளாவில் இன்று 3,215 பேருக்குக் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்றும், 12 பேர் மரணம் அடைந்ததாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் இன்று (செவ்வாய்க் கிழமை) நிருபர்களிடம் கூறியதாவது:

''கேரளாவில் இன்று 3,215 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் திருவனந்தபுரம் மாவட்டத்தில்தான் மிக அதிகமாக 656 பேருக்கு நோய் பரவியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக 348 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 338 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், 260 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், 239 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், 234 பேர் கொல்லம் மாவட்டத்தையும், 213 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 192 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், 188 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், 172 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 146 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும், 136 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 64 பேர் வயநாடு மாவட்டத்தையும், 29 பேர் இடுக்கி மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

கரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 12 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதையடுத்துக் கேரளாவில் கரோனாவால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 466 ஆக உயர்ந்துள்ளது.

இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 43 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 70 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்துள்ளவர்கள் ஆவர். கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 3,013 பேருக்கு நோய் பரவியுள்ளது. இதில் 313 பேருக்கு நோய் எப்படி, எங்கிருந்து பரவியது எனத் தெரியவில்லை.

திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் 626 பேருக்கு கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவியுள்ளது என்று குறிப்பிடத்தக்கதாகும். சுகாதாரத் துறையைச் சேர்ந்த 83 பேருக்கு நோய் பரவியுள்ளது. சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு இந்த அளவுக்கு நோய் பரவுவது கவலை அளிக்கிறது.

கரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 2,532 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதையடுத்து இதுவரை கேரளாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 82,345 ஆக உயர்ந்துள்ளது. தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 31,156 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் 2,08,141 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 1,85,514 பேர் வீடுகளிலும், 22,627 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர்.

இன்று நோய் அறிகுறிகளுடன் 2,324 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 41,054 பரி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. சிபிநாட், ட்ரூநாட் உள்பட இதுவரை மொத்தம் 21,98,858 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதுதவிர சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கம் உள்ளவர்களிடம் இருந்து இதுவரை மொத்தம் 1,90,612 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. நோய்த் தீவிரம் உள்ள பகுதிகளில் இன்று புதிதாக 12 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 10 பகுதிகள் இந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது கேரளாவில் 617 நோய்த் தீவிரம் உள்ள பகுதிகள் உள்ளன.

தற்போது நோய்ப் பரவலின் வேகம் கேரளாவில் அதிகரித்து வருகிறது. எனவே அனைவரும் முகக் கவசம் அணிவது உள்ளிட்ட நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும். அரசு பலமுறை வலியுறுத்தியும் முகக்கவசம் அணியாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத் தவிர்க்க வேண்டும். கேரளாவில் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு ஒரு மாதத்திற்குப் பின்னர்தான் மற்ற மாநிலங்களில் நோய் பரவியது.

தற்போது தமிழ்நாட்டில் 5 லட்சம் நோயாளிகளுக்கு மேல் உள்ளனர். 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். சர்வதேச அளவில் 10 லட்சத்தில் 119 பேர் கரோனா பாதித்து மரணம் அடைகின்றனர். இந்தியாவில் இந்த எண்ணிக்கை 58 ஆகும். கர்நாடகாவில் 120 பேரும், தமிழ்நாட்டில் 117 பேரும் மரணமடைகின்றனர். ஆனால், கேரளாவில் 10 லட்சத்திற்கு 13 பேர் மட்டுமே மரணமடைகின்றனர்.

ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் கேரளாவுக்கு இதுவரை பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து 6,24,826 பேரும், வெளிநாடுகளில் இருந்து 3,80,385 பேரும் வந்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இருந்துதான் மிக அதிகமாக 1,83,034 பேர் வந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து 1,67, 281 பேரும், மகாராஷ்டிராவில் இருந்து 71,690 பேரும் வந்தனர். வெளிநாடுகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்துதான் மிக அதிகமாக 1,91,332 பேர் வந்துள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 67 சதவீதம் பேர் சிவப்பு மண்டலத்தில் இருந்து வந்துள்ளனர்''.

இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x