Last Updated : 29 Sep, 2015 06:31 PM

 

Published : 29 Sep 2015 06:31 PM
Last Updated : 29 Sep 2015 06:31 PM

சிகரெட் பாக்கெட்களில் பெரிய எச்சரிக்கை படம்: நிதானம் காட்டும் மத்திய அரசு

பீடி, சிகரெட் பாக்கெட்கள் மீது உடல்நலக் கேடு தொடர்பான எச்சரிக்கையை சித்தரிக்கும் படத்தை பெரிய அளவில் வெளியிட உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் இந்த உத்தரவைச் செயல்படுத்தும் முடிவை மத்திய அரசு தள்ளிவைத்துள்ளது.

புகைப்பிடிப்பதால் ஏற்படும் உடல்நலக்கேடு குறித்த படம் சிகரெட் பாக்கெட்கள் மீது இப்போது சிறிய அளவில் வெளியிடப்படுகிறது. இது நடப்பு ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் 85 சதவீத அளவுக்கு பெரிது படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. ஆனால் இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை.

சுகாதாரத் துறை உத்தரவிலிருந்து மாறுபட்ட நாடாளுமன்ற குழு, இந்த உத்தரவால் தொழில்துறை பாதிக்கப்படும் என்பதால் இதனை மறுபரிசீலனை செய்ய கோரியது. புகையிலை தயாரிப்பு நிறுவனங்களான ஐடிசி, காட்ஃப்ரே பிலிப்ஸ் போன்ற ஆயிரக்கணக்கான நிறுவனங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த உத்தரவை அமல்படுத்துவது நடைமுறைக்கு ஒத்துவராது என்று நிறுவனங்கள் தங்களது எதிர்ப்பை முன்வைத்துள்ளனர்.

இதனிடையே, கடந்த ஜூலை மாதம் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வந்த பொதுநல வழக்கு விசாரணையின்போது, சிகரெட் பாக்கெட்களில் எச்சரிக்கை படத்தை பெரிய அளவில் வெளியிடக் கூடிய உத்தரவை அமல்படுத்துவதில் தாமதம் ஏன் என்று சுகாதாரத் துறைக்கு கேள்வி எழுப்பப் பட்டது.

இந்த நிலையில் சிகரெட் பாக்கெட்களில் எச்சரிக்கை படத்தை பெரிய அளவில் வெளியிடும் முடிவு பரிசீலிக்கப்படுவதாக சுகாதார அமைச்சகம் திங்கள்கிழமை அறிவித்தது.

"தற்போதைய நிலையில் இந்த உத்தரவை அமல்படுத்துவது சாத்தியமில்லை என்றும், எற்கெனவே தயாரிக்கப்பட்ட கோடிக்கணக்கான பாக்கெட்டுகள் சந்தையில் இருக்கும் நிலையில் அதனை கருத்தில் கொண்டு உத்தரவு தாமதப்படுத்தப்பட்டது." என்று பெயர் கூற விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x