Published : 14 Sep 2020 07:39 PM
Last Updated : 14 Sep 2020 07:39 PM

25 எம்.பி.க்களுக்கு கரோனா: நாடாளுமன்றம் தொடங்கும் முன்பாக சோதனையில் அதிர்ச்சி: கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாத நிலை

புதுடெல்லி

நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் முன்னதாக எம்.பி.க்களுக்கு இன்று கரோனா பரிசோதனை நடைபெற்றது. அவர்களில் 25 எம்.பி.க்களுக்கு கரோனா இருப்பது தற்செயலாக தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி வார விடுமுறையின்றி, அக்டோபர் 1-ம் தேதிவரை நடக்கிறது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் இரு அவைகளும் இயங்கும்.

கரோனா வைரஸ் சூழலைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்றக் கூட்டம் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரையிலும், பின்னர் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடக்கும். கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இல்லை. தனிநபர் மசோதாவும் இல்லை.

கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரமும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுகிறது. கேள்வி நேரம் இடம் பெறாது.அதன்படி இன்று நாடாளுமன்றம் இன்று கூடியது. காலையில் மக்களவையும், பிற்பகலில் மாநிலங்களவையும் தொடங்கியது. அதற்கு முன் கூட்டத்தில் பங்கேற்கும் எம்.பி.க்கள் அனைவருக்கும் கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

கரோனா இல்லை என்று தெரிய வந்தால் மட்டுமே நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்க முடியும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால் எம்.பி.க்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மக்களவை எம்.பி.க்கள் 17 பேருக்கும், மாநிலங்களவை எம்.பி.க்கள் 8 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவர்களில் பாஜக எம்.பி.க்கள் 12 பேர், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள் இருவர், சிவசேனா, திமுக, ராஷ்ட்ரீய லோக்தள கட்சி எம்.பி.க்கள் தலா ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் அனைவரும் மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாஜக எம்.பி. மீனாட்சி லேகி தனக்கு கரோனா இருப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x