

இந்திய எல்லைகளைப் பாதுகாவல் புரியும் ராணுவ வீரர்கள் பின்னால் நம் நாடே உள்ளது என்ற செய்தியை நாடாளுமன்றம் தெரிவிக்கும் என்று நம்புகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக, செய்தியாளர்களிடம், பிரதமர் மோடி, சீனாவுடன் தற்போது இருந்து வரும் எல்லைப்பிரச்சினை தொடர்பாக கூறும்போது இந்திய வீரர்கள் தீரத்துடன் எல்லையில் கடமையாற்றி வருகின்றனர். கடினமான மலைப்பகுதிகளில் இவர்களது அரிய பணி பாராட்டத்தக்கது என்றார்.
அதே போல் நாடாளுமன்றத்தில் இந்த முறை முக்கியமான முடிவுகளும் விவாதங்களும் நடைபெறும், எம்.பி.க்கள் விவாதங்களின் மூலம் மதிப்பைக் கூட்ட வேண்டும் என்று தான் நம்புவதாக தெரிவித்தார்.
கரோனா பெருந்தொற்று குறித்து அவர் கூறும் போது எம்.பி.க்கள் கடமையை அனைத்து முன்னெச்சரிக்கையுடனும் செய்வார்கள் என்று தான் நம்புவதாகக் கூறினார்.
வைரஸுக்கு வாக்சின் கண்டுப்பிடிக்கும் வரை எந்த ஒரு அலட்சியமும் கூடாது என்றார்.
கொரோனா தொற்றைத் தடுக்க தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும். உலகின் எங்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் அது மக்களுக்கு விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ராணுவ வீரர்கள் லடாக் எல்லையில் சோதனைகளை எதிர்கொண்டு பாதுகாப்பை உறுதி செய்கின்றனர்.
நாடு ஒன்றுபட்டு இந்திய ராணுவ வீரர்களுக்கு வலிமை அளிக்க வேண்டும். நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எம்பிக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.