உ.பி.யிலும் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் ஊழல்: உயிரிழந்த 740 விவசாயிகள் பெயரில் பணம் பெற்றது அம்பலம்

உ.பி.யிலும் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் ஊழல்: உயிரிழந்த 740 விவசாயிகள் பெயரில் பணம் பெற்றது அம்பலம்
Updated on
1 min read

தமிழகத்தைத் தொடர்ந்து பிரதமரின் விவசாயிகள் நிதியுதவிதிட்டத்தின் கீழ் உத்தரபிரதேசத் திலும் ஊழல் நடைபெற்றுள்ளது. இங்கு இறந்துபோனவர்கள் பெயரிலும், ஒரே விவசாயி 2 முறை பணம் பெற்று வந்ததும் அம்பலமாகி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் பிரதமர் நிதியுதவி திட்டத்தின் கீழ் சுமார் 2.76 லட்சம் விவசாயிகள் பலனடைய உள்ளனர். இதில், சுமார் 2.53 லட்சம் பேர் மட்டுமே இதுவரை சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால், ஒருபுறம் மீதியுள்ளவர்களை அத்திட்டத்தில் சேர்க்கும் முயற்சி தொடர்கிறது. அதேசமயம், இறந்துபோனவர்களும், ஒரே விவசாயிஇரண்டு முறை பயன்பெறுவதும் தொடர்ந்தது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது.

மரணமடைந்த 740 விவசாயிகளின் பெயரிலும் 67 விவசாயிகள் இரண்டு முறை நிதியுதவி பெற்றதும் தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவருக்கும் உத்தரபிரதேச அரசின் விவசாயத்துறையின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில்,அவர்கள் சட்டவிரோதமாகபெற்ற தொகையை உடனடியாகதிருப்பிச் செலுத்தும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதைச் செலுத்தத் தவறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தண்டணை அளிப்பதுடன் ஜப்தி மூலம் பணம் வசூல் செய்யப்படும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து உத்தரபிரதேச மாநில விவசாயத் துறை அதிகாரிகள் வட்டாரம் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, "இதை எங்கள் துறையின் மாவட்ட நிர்வாகிகள் தொடர்பு இன்றி செய்திருக்க வாய்ப்பில்லை. எனவே,அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்தவகையில், மேலும் பல மாவட்டங்களிலும் மோசடி நடந்திருப்பதாக புகார்கள் வருவதன் மீதும் விசாரணை தீவிரமாக நடைபெறுகிறது" என்றனர்.

இதன் மீதான புகார் உத்தர பிரதேச மாநில விவசாயத் துறைக்கு வந்ததன் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் நிதியைப் பெறுபவர் சமர்ப்பித்த ஆதார் மற்றும் வாக்காளர் அட்டைகள் பொருந்தாமல் இருந்ததைத் தொடர்ந்து மோசடி வெளியானது. இதில் மேலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இதுபோல மோசடி செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வரு்கிறது.

இந்த மோசடியில் அனைவருக்கும் இதுவரை இரண்டு தவணைகளில் ரூ.6,000 நிதியுதவி அவர்களது போலி வங்கிக்கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. இவற்றை வங்கிகள் மூலமாகவும் திருப்பி வசூல் செய்யும் நடவடிக்கையும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த திட்டம் கடந்த வருடம் பிப்ரவரியில் நாடு முழுவதிலும் ஒரே சமயத்தில் அமல்படுத்தப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in