Published : 13 Sep 2020 08:11 AM
Last Updated : 13 Sep 2020 08:11 AM

கட்டிடத் தொழிலாளர் நிதியை அனைத்து தொழிலாளர்களின் நலனுக்கும் பயன்படுத்தலாம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

மத்திய பிரதேச அரசு சார்பில்உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில்,கரோனா பாதிப்பு காரணமாகமாநில அரசுக்கு வருமானம் குறைந்துவிட்டதால் கட்டிடத் தொழிலாளர் நலனுக்காக திரட்டப்பட்ட நிதியில் இருந்து ரூ.1,000 கோடியை பெற அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த நிதியை மாநில நல வாரியத்துக்கு வட்டியுடன் செலுத்துவோம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், ‘‘கரோனா காலத்தில் கட்டிடத் தொழிலாளர் நலனுக்காக திரட்டப்பட்ட நிதியை மற்ற தொழிலாளர்களின் நலனுக்கும் பயன்படுத்தலாம். அனைத்து தொழிலாளர்களும் ஏழைகளாகவே உள்ளனர். எனவே, கட்டிடத் தொழிலாளர் நிதியை மற்ற தொழிலாளர் நலனுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்’’ என்றனர்.

மேலும், "இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு ஏன் அவசர சட்டம் பிறப்பிக்கக் கூடாது?" என்று அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மாதவி திவானிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக அரசின் கருத்தைக் கேட்டு நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக மாதவி திவான் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x