Published : 17 Sep 2015 11:56 AM
Last Updated : 17 Sep 2015 11:56 AM

ஹைதராபாத் விநாயகருக்கு 6,000 கிலோ மெகா லட்டு காணிக்கை

ஹைதராபாத்தில் உள்ள கைரதாபாத் விநாயகருக்கு 6,000 கிலோ எடை கொண்ட லட்டு பிரசாதம் நேற்று காணிக்கையாக வழங்கப்பட்டது. இந்த மெகா லட்டு பிரசாதம் கிரேன் மூலம் விநாயகர் சிலையின் கையில் வைக்கப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 30 ஆண்டுகளாக ஹைதராபாத்தில் உள்ள கைரதாபாத் பகுதியில் மாபெரும் விநாயகர் சிலை வைப்பது வழக்கம். இதன்படி இந்த ஆண்டும் மிகப்பெரிய விநாயகர் சிலை அங்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையின் கையில் வைக்கப்படும் மெகா லட்டு பிரசாதமும் மிகவும் பிரபலம். இந்த லட்டு விழாவின் நிறைவு நாளில் பக்தர்களுக்கு ஏலம் விடப்படும். இதற்கு கடும் போட்டியே நிலவும். கடந்த 5 ஆண்டுகளாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சுருசி புட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மல்லி பாபு, இந்த விநாயகருக்கு லட்டு பிரசாதத்தை இலவசமாக தயாரித்து வழங்கி வருகிறார்.

2010-ல் 500 கிலோ, 2011-ல் 2,400 கிலோ, 2012-ல் 3,500 கிலோ, 2013-ல் 4,200 கிலோ, 2014-ம் ஆண்டில் 5,200 கிலோ லட்டு பிரசாதம் வழங்கினார்.

இந்த ஆண்டு 6,000 கிலோ எடை கொண்ட லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக 15 ஊழியர்களைக் கொண்டுதயாரிக்கப்பட்ட இந்த லட்டு பிரசாதம் நேற்று கிரேன் உதவியுடன் வாகனத்தில் ஏற்றப்பட்டு ஹைதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று மீண்டும் கிரேன் உதவியுடன் இந்த லட்டு பிரசாதம் கைரதாபாத் விநாயகர் சிலையின் கையில் வைக்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x