Published : 11 Sep 2020 09:45 PM
Last Updated : 11 Sep 2020 09:45 PM
பிஹாரில் பெட்ரோலித்துறை தொடர்பான 3 முக்கிய திட்டங்களை செப்டம்பர் 13ம் தேதி அன்று காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இந்த திட்டங்களில் துர்காபூர்-பாங்கா பிரிவு உட்பட பரதீப்-ஹால்டியா-துர்காபூர் பைப்லைன் இணைப்பு திட்டம் மற்றும் இரண்டு எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் நிரப்பும் ஆலைகளும் அடங்கும். இவற்றை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் மற்றும் எச்பிசிஎல் நிறுவனங்கள் அமைக்கின்றன.இந்நிகழ்ச்சியில் பிஹார் முதல்வரும் கலந்து கொள்கிறார்.
துர்காபூர்-பாங்கா பைப்லைன் திட்டம்
பரதீப்-ஹால்டியா-துர்காபூர் பைப்லைன் இணைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக 193 கி.மீ தூரத்துக்கு தூர்காபூர் பாங்கா பைப்லைன் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் அமைத்துள்ளது. இத்திட்டத்துக்கு கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதி அடிக்கல் நாட்டினார்.
பிஹார் பாங்காவில் எல்பிஜி சிலிண்டர் ஆலை:
பீகாரில் அதிகரித்து வரும் எல்பிஜி சிலிண்டர் தேவையை, பாங்காவில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எல்பிஜி சிலிண்டர் ஆலை நிறைவேற்றும். இந்த ஆலை ரூ.131.75 கோடி முதலீட்டில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒரு நாளைக்கு 40 ஆயிரம் சிலிண்டர்களில் கேஸ் நிரப்ப முடியும். இந்த ஆலை மூலம் பீகாரில் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பு ஏற்படும்.
பிஹார், சம்பரானில்(ஹர்சிதி) எல்பிஜி சிலிண்டர் ஆலை
பிஹாரின் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில், ரூ.136.4 கோடி மதிப்பீட்டில் இந்த எல்பிஜி சிலிண்டர் நிரப்பும் ஆலையை எச்பிசிஎல் நிறுவனம் அமைத்துள்ளது. இதற்கு பிரதமர் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி அடிக்கல் நாட்டினார். பிஹாரின் பல மாவட்டங்களின் எல்பிஜி சிலிண்டர் தேவைகளை இந்த ஆலை நிறைவேற்றும்.இந்நிகழச்சி தூர்தர்ஷன் செய்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT