Last Updated : 11 Sep, 2020 05:40 PM

 

Published : 11 Sep 2020 05:40 PM
Last Updated : 11 Sep 2020 05:40 PM

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் 23 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு முடிவு


வரும் 14-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டதொடரில் 23 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்து, நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் 11 மசோதாக்கள் அவசரச்சட்டத்தை மாற்றுவதற்காக கொண்டுவரப்படும் மசோதாக்களாகும்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும்14-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 18 நாட்கள் அக்டோபர் 1-ம் தேதிவரை நடக்கிறது. கரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடத்தப்படுவதால், பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துள்ளது.

சமூக விலகலைக் கடைபிடிக்கும் வகையில் எம்.பி.க்கள் இருக்கை மாற்றப்பட்டுள்ளது. 96 மணிநேரத்துக்கு முன்பே எம்.பி.க்கள் கரோனா பரிசோதனை செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது, அனைத்தும் எழுத்து மூலம் வழங்கப்படும் என்றும், கேள்விநேரத்துக்கு பிந்திய நேரம் 30நிமிடங்களாகவும்குறைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் மழைக்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு 23 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்து நிறைவேற்றிட திட்டமிட்டுள்ளது. இதில் 11 மசோதாக்கள் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் அவசரச்சட்டங்களுக்கு மாற்றாக கொண்டுவரப்படுகின்றன.

கரோனாவுக்கு எதிரானப் பணியில் இருக்கும் சுகாதாரப்பணியாளர்களை தாக்கினால் ஜாமீனில் வெளிவரமுடியாத குற்றமாகக் கருதி, சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கும் அவசரச்சட்டத்துக்கு மாற்றாக மசோதாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கத் தேவையான நிதிதிரட்டலில் எம்.பி.க்கள் ஊதியம் ஓர் ஆண்டுக்கு 30 சதவீதம் குறைத்துள்ளது தொடர்பான அவசரச்சட்டத்துக்கு மாற்றாக மசோதா அறிமுகமாகிறது.

இது தவிர விவசாயிகள் உற்பத்தி வர்த்தக ஊக்குவிப்புக்காக அவசரச்சட்டம்கொண்டுவரப்பட்டது. இதன் படி விவசாயிகள் நாடுமுழுவதும் தங்களின் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம் என அவசரச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்கு மாற்றாக மசோதா அறிமுகமாகிறது.

ஜம்மு காஷ்மீர் அலுவல் மொழி மசோதா அதாவது, ஜம்மு காஷ்மீரில் காஷ்மீர், டோக்ரி, ஹிந்தி, உருது,ஆங்கிலம் ஆகியவற்றை அலுவல் மொழியாக மாற்றும் மசோதா உள்ளிட்ட 23 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

இதுதவிர தொழிலாளர் துறையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவரும் மதோாக்களையும், மனிதக்கழிவுகளை மனிதர்களை அள்ளுவதை தடை செய்வது மற்றும் மறுவாழ்வு திருத்த மசோதா ஆகியவற்றையும் மத்திய அரசு அறிமுகம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவைத் தொடங்கிய முதல்நாளில் நடப்பு நிதியாண்டுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடக்கும். அதன்பின் வரும் நாட்களில் மற்ற மசோதாக்கள் அறிமுகமாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x