Last Updated : 10 Sep, 2020 07:27 PM

 

Published : 10 Sep 2020 07:27 PM
Last Updated : 10 Sep 2020 07:27 PM

இந்தியாவில் கோவிஷீல்ட் கரோனா தடுப்பு மருந்தின் கிளினிக்கல் பரிசோதனை நிறுத்தம்: செரம் நிறுவனம் அறிவிப்பு

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஜென்னர் இன்ஸ்டிடியூட் மற்றும் அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் இணைந்து கண்டுபிடித்த கரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்ட் மருந்தின் கிளினிக்கல் பரிசோதனைகள் இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளதாக செரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட் கரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை செரம் நிறுவனம் பெற்றிருந்தது. அந்த நிறுவனத்துடன் கூட்டாகச் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கோவிஷீல்ட் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவருக்குக் கடுமையான பக்கவிளைவுகள் கடந்த வாரம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த மருந்தின் கிளினிக்கல் பரிசோதனை உடனடியாக பல்வேறு நாடுகளிலும் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் கோவிஷீல்ட் மருந்தின் 2-வது கட்டம் மற்றும் 3-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனையை இந்தியாவில் நடத்த செரம் மருந்து நிறுவனம் தயாராகி ஆகஸ்ட் மாதம் இறுதியில் பரிசோதனையைத் தொடங்கியது.

இந்நிலையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தங்களின் கோவிஷீல்ட் மருந்தின் கிளினிக்கல் பரிசோதனையை நிறுத்திவிட்டதால், இந்தியாவில் செரம் நிறுவனமும் பரிசோதனையை நிறுத்துமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு நேற்று செரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.

அதில், ''மற்ற நாடுகளில் கோவிஷீல்ட் மருந்தின் கிளினிக்கல் பரிசோதனையின்போது பலருக்கும் பக்கவிளைவுகள் ஏற்பட்டதால், அந்த மருந்தின் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. அந்த பாதிப்பு குறித்தும், பக்கவிளைவு குறித்தும் ஏன் அறிக்கை அளிக்கவில்லை'' என்று தெரிவித்திருந்தது.

இதுகுறித்து செரம் நிறுவனம் நேற்று அளித்த அறிக்கையில், ''இந்தியாவில் எந்தவிதமான பாதிப்பும் இல்லாததால், நாங்கள் பரிசோதனையை நிறுத்தவில்லை. பரிசோதனையை நிறுத்துமாறு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு கோரவில்லை'' எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், செரம் நிறுவனம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், “இந்தியாவில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட் கரோனா தடுப்பு மருந்தின் கிளினிக்கல் பரிசோதனையைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டோம்.

கோவிஷீல்ட் மருந்தின் கிளினிக்கல்பரிசோதனையை மீண்டும் தொடங்கும்வரை நிலைமையை ஆய்வு செய்து வருகிறோம் அதுவரை கிளினிக்கல் பரிசோதனை நிறுத்தப்படுகிறது. இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் உத்தரவுகளைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். இதைத் தவிர வேறு எந்தக் கருத்தும் கூற இயலாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x