Last Updated : 10 Sep, 2020 02:08 PM

 

Published : 10 Sep 2020 02:08 PM
Last Updated : 10 Sep 2020 02:08 PM

தங்கம் கடத்தல் வழக்கு: கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் மகனிடம் அமலாக்கப்பிரிவினர் 11 மணிநேரம் விசாரணை

விசாரணைக்கு நேற்று ஆஜராகிய பினீஷ் கொடியேறி : படம் உதவி ட்விட்டர்

கொச்சி

கேரள அரசியலை உலுக்கி வரும் தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் பினீஷ் கொடியேறியிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேற்று 11 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

பினீஷ் கொடியேறிக்கு, பெங்களூரு போதை மருந்து வழக்கில் கைதானவர்களுடனும், தங்கம் கடத்தல் வழக்கில் கைதாகியிருப்பவர்களுடன் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தநிலையில் இந்த விசாரணை நடந்தது.

அமலாக்கப்பிரிவு அலுவலகத்துக்கு நேற்று காலை 10 மணிக்குச் சென்ற பினீஷ் கொடியேறி இரவு 10 மணிக்குத்தான் வெளியே அனுப்பப்பட்டார். அதன்பின் அவரிடம் நிருபர்கள் கேட்டபோது எதற்கும் பதில் அளிக்காமல் சென்றுவிட்டார்.

திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபுஅமீரகத்தின் தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி தங்கம் கடத்திய வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் , சந்தீப் நாயர், சரித் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 20-க்கும் மேற்பட்டோரிடம் அமலாக்கப்பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன்

இதற்கிடையே பெங்களூருவில் போதை மருந்து கடத்தியது தொடர்பாக தேசிய போதை மருந்து தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ள சிலருடனும், தங்கம் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள முக்கியமான சிலருடனும் பினீஷ் கொடியேறிக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.

போதை மருந்து கடத்தலில் சிக்கி கைதாகியுள்ளவர்களும் தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாகவும் அமலாக்கப்பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பினீஷ் கொடியேறிக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கப்பிரிவினர் விசாரணைக்கு ஆஜராகக் கோரினர். அதன்பெயரில் பினீஷ் நேற்று விசாரணைக்குச் சென்றார், ஆனால், போதை மருந்து கடத்தல் அல்லது தங்கம் கடத்தல் இதில் எந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்தது என்பது தெரியவில்லை.

முன்னதாக, சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவினர் தாக்கல் செய்த மனுவில், பெங்களூரு போதை மருந்து விவகாரத்தில் கைதாகியுள்ளவர்கள், கேரள தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்பு இருக்கலாம் என சந்தேக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், தங்கம் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 4 பேரும் தொடர்ந்து நீதிமன்ற காவலில் வைக்கவும் அமலாக்கப்பிரிவு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும் பெங்களூருவில் உள்ள தேசிய போதை மருந்து தடுப்பு பிரிவினரிடம் பல்வேறு தகவல்களையும் அமலாக்கப்பிரிவினர் கோரியுள்ளனர்.

இதற்கிடையே இந்தியன் முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞர் பிரிவு பொதுசெயலாளர் பி.கே. பிரோஸ், பெங்களூரு போதை மருந்து கடத்தலில் கைதாகியுள்ளவர்களுடன் பினீஷ் கொடியேறிக்கு தொடர்பு உண்டு, கைதாகியுள்ள முக்கிய நபர் முகமது அனூப்புடன், பினீஷ் கொடியேறி பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளார் என்று குற்றச்சாட்டு கூறியுள்ளதும் கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x