Last Updated : 10 Sep, 2020 09:05 AM

 

Published : 10 Sep 2020 09:05 AM
Last Updated : 10 Sep 2020 09:05 AM

குஜராத்தில் தமிழர்களால் தொடங்கப்பட்ட தமிழ்வழிக் கல்வி பள்ளிகள் மூடும் நிலை தொடர்ந்து செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

பல ஆண்டுகளுக்கு முன்பு நெசவுத் தொழிற்சாலைகளில் பணிபுரிய தமிழத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் அகமதாபாத்துக்கு இடம் பெயர்ந்தனர். இவர்களின் குழந்தை கள் தமிழ்வழிக் கல்வி பயில் வதற்காக அங்கு பள்ளிகள் தொடங்கப்பட்டன.

நாடு சுதந்திரம் அடைந்த பின்அகமதாபாத் நகராட்சி கல்வி வாரியத்தால் 8 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. 1 முதல் 7 வரையிலான வகுப்புகள் தமிழ்வழிப் பாடங்களுடன் நடைபெற்று வந்தன.

இப்பள்ளிகளின் குழந்தைகள் தமிழ்வழிக் கல்வியை தொடரும் வகையில் அங்கு வாழ்ந்த தமிழர்களால் 1970-ல் உயர்நிலைப் பள்ளியும் தொடங்கப் பட்டது. இது, அகமதாபாத் தமிழர் நலக் கல்வி அறக்கட்டளையின் சார்பில் 8 முதல் 10-ம் வகுப்புகளுடன் ‘அகமதாபாத் தமிழ் மேல்நிலைப்பள்ளி (ஏடிஎஸ்)’ என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இதனை குஜராத் அரசும் நிதி உதவி பெறும் பள்ளியாக அங்கீகரித்து, அரசு தேர்வை நடத்தியது.

இதனிடையே, பல்வேறு காரணங்களுக்காக அகமதாபாத் நகராட்சியின் 8 தொடக்கப் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை குறையத் தொடங்கியது .இதனால் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்வழிக் கல்வியின் தொடக்கப்பள்ளிகளை படிப்படியாக அகமதாபாத் நகராட்சி மூடியது.

நகராட்சி தொடக்கப்பள்ளி களின் நலியும் நிலையால் தமிழர்களின் ஏடிஎஸ் பள்ளியில் பெரும் தாக்கம் ஏற்பட்டது. இதனால், தொடர்ந்து குறைந்த மாணவர்கள் எண்ணிக்கை தற்போது 31 என்றானது. குஜராத்தில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் குறைந்தபட்ச மாணவர்கள் எண்ணிக்கை 36 என்றிருப்பது அவசியம். எனவே, 50 வருடங்களுக்கு முன்பு தமிழர்கள் தொடங்கிய இந்த ஏடிஎஸ் பள்ளியை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அகமதாபாத் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர் மூத்த ஆங்கிலப் பத்திரிகையாளர் ஆர்.மாணிக்கவாசகம் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, "2005-ம் ஆண்டுவரை கூட நகராட்சி பள்ளிகளில்சுமார் 1,300 மற்றும் மேல்நிலைப்பள்ளியில் 600 மாணவர்களும் பயின்று வந்தனர்.

இவை நலியும் நிலைக்கு தள்ளப்பட்டபோது அதற்கு ஏற்ப மாற்று நடவடிக்கைகள் எடுக்காததே பள்ளிகள் மூடப் படுவதற்கு காரணம். இதில் தமிழக அரசு தலையிட்டு குஜராத் அரசிடம் பேசி உதவ முன்வந்தால் தமிழ்ப் பள்ளிகள் உயிர்பெறும் வாய்ப்புகள் உள்ளன" என்றார். ஆர்.ஷபிமுன்னா


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x