Published : 10 Sep 2020 06:42 AM
Last Updated : 10 Sep 2020 06:42 AM

6 மாதங்களுக்கு பிறகு செப்.21-ல் மீண்டும் திறக்கப்படுகிறது தாஜ்மஹால்

கரோனா வைரஸ் இந்தியாவில் மார்ச் மாதம் முதலாக பரவத் தொடங்கியது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூடுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இதன் ஒருபகுதியாக, கடந்த மார்ச் 17-ம் தேதி முதல் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலும், ஆக்ரா கோட்டையும் மூடப்பட்டன. தேசிய பொதுமுடக்கம் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே இந்த இடங்கள் மூடப்பட்டுவிட்டன.

இந்நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காகவும், பொருளாதார சூழலை மேம்படுத்துவதற்காகவும் பொதுமுடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நாடு முழுவதும் சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.

எனினும், மக்கள் அதிகளவில் கூடும் இடம் என்பதால் தாஜ்மஹாலும், ஆக்ரா கோட்டையும் இதுவரை திறக்கப்படாமலேயே இருக்கின்றன. இந்த சூழலில், வரும் 21-ம் தேதி முதலாக இவை இரண்டையும் திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க தினந்தோறும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஆன்லைன் மூலமாகவே டிக்கெட் விற்பனை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சமூக இடைவெளியை பேணுவதும், முகக்கவசம் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x