குறைந்த விலையில் 10 கோடி ஸ்மார்ட் போன் விற்க திட்டம்: ரிலையன்ஸ் ஜியோ அதிரடி

குறைந்த விலையில் 10 கோடி ஸ்மார்ட் போன் விற்க திட்டம்: ரிலையன்ஸ் ஜியோ அதிரடி
Updated on
1 min read

கடந்த ஜூலை மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோவின் உரிமையாளர் முகேஷ் அம்பானி குறைந்த விலையில் ஸ்மார்ட் போன் தயாரிக்க இருப்பதாகவும், அதற்கான ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கூகுள் நிறுவனம் தர உள்ளதாகவும் கூறினார். இந்த இயங்குதளம் 4ஜி அல்லது 5ஜி திறன் கொண்டதாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதற்காக கூகுள் 4.5 பில்லியன் டாலர் ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்வதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் வரும் டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில் சந்தையிலேயே மிகவும் விலை குறைந்த ஸ்மார்ட்போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 10 கோடி ஸ்மார்ட்போன்களை சந்தைக்குக் கொண்டுவர இருப்பதாகவும், அறிமுக சலுகையாக குறிப்பிட்ட காலத்துக்கு இலவச இணைய வசதியும் வழங்கப்படும் எனவும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோவின் 33 சதவீத பங்குகளை விற்பனை செய்து ரூ.1.52 லட்சம் கோடி நிதித் திரட்ட திட்டமிட்டது. இதையடுத்து ஃபேஸ்புக், கூகுள், குவால்கம் மற்றும் இன்டெல் உள்ளிட்டவை ஜியோவில் முதலீடு செய்யத் தொடங்கின. இதன்மூலம் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க டெலிகாம் நிறுவனமாகவும், டிஜிட்டல் சேவை நிறுவனமாகவும் ஜியோ உருவாகி வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in