Last Updated : 09 Sep, 2020 04:32 PM

 

Published : 09 Sep 2020 04:32 PM
Last Updated : 09 Sep 2020 04:32 PM

மராத்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு


மராத்திய மாநில மக்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கும் 2018 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட எஸ்இபிசி சட்டத்தை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

அதேசமயம், இந்தச் சட்டத்தின் மூலம் பலன் பெற்று வேலையில் இருப்போரையும், கல்வி பயில்வோரையும் எந்தவிதமான தொந்தரவும் செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் ஆண்ட முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன்படி, மராத்திய மக்களுக்கு வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் 16 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி சட்டப்பேரவையில் சட்டம் இயற்றியது. சமூகம் மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கான சட்டம் 2018 எனப் பெயரிடப்பட்டு இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், இந்தச் சட்டத்துக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. சட்டத்தைச் செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.

இந்தச் சட்டத்துக்கு ஆதரவாக மராட்டிய அரசுத் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், மராத்திய மக்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பின்தங்கிய நிலையில் இருப்பதால்தான் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்று வாதிட்டனர்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சட்டத்தை நடைமுறைப்படுத்த கடந்த ஆண்டு ஜூன் 27-ம் தேதி அனுமதியளித்தனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி இட ஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மேல் இருக்கக்கூடாது, சில விதிவிலக்குகள் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், 16 சதவீதம் இட ஒதுக்கீடு என்பதை ஏற்க முடியாது. வேலைவாய்ப்பில் 12 சதவீதத்துக்கு மிகாமலும், கல்வியில் 13 சதவீதத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.

ஆனால், மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகப் பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். உச்ச நீதிமன்றம் மண்டல் வழக்கில் அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பான 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை மீறி மராத்திய மக்களுக்கான இட ஒதுக்கீடு சட்டம் இருக்கிறது.

அரசியலமைப்பின் 102-வது திருத்தத்தின்படி, சில சமூகங்களுக்கு குடியரசுத் தலைவர் அனுமதியளித்தால் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் மாநிலத்தில் மருத்துவக் கல்விக்கான சேர்க்கையைத் தள்ளிவைக்கக் கோரினர்.

மகாராஷ்டிர அரசு கடந்த ஜூலை 27-ம் தேதி தாக்கல் செய்த மனுவில், செப்டம்பர் 15-ம் தேதிவரை மராத்திய மக்களுக்கான வேலைவாய்ப்பில் 12 சதவீத இட ஒதுக்கீட்டை பொது சுகாதாரம், மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி ஆகியவற்றைத் தவிர்த்து மற்ற துறைகளில் நடைமுறைப்படுத்தமாட்டோம் என்று உறுதியளித்தது.

இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.என் ராவ் தலைமையிலான அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது.

அப்போது, நீதிபதி எல்.என்.ராவ், பிறப்பித்த உத்தரவில், “மகாராஷ்டிர அரசு கொண்டு வந்த மராட்டிய மக்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தடை விதிக்கிறேன்.

அதேசமயம், இதற்கு முன் இந்தச் சட்டத்தால் பலன் அடைந்து வேலையில் இருப்போர், கல்வி பயின்று வருவோர்களை எந்தவிதமான தொந்தரவும் செய்யக்கூடாது.

இந்த வழக்கில் கூடுதலான நீதிபதிகள் விசாரணை செய்ய வேண்டியிருப்பதால், அதிகமான அமர்வுக்கு வழக்கை மாற்றக் கோரி தலைமை நீதிபதி போப்டேவுக்குப் பரிந்துரைக்கிறேன்” என உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x