Last Updated : 09 Sep, 2020 01:34 PM

 

Published : 09 Sep 2020 01:34 PM
Last Updated : 09 Sep 2020 01:34 PM

நீட் நுழைவுத் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுக்கள் தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

கரோனா வைரஸ், மழை வெள்ளம் ஆகியவற்றைக் காரணம்காட்டி, வரும் 13-ம் தேதி நடைபெற உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்யவும், ஒத்திவைக்கவும் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க மறுத்து உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

கரோனா வைரஸ் பரவல் இன்னும் நாடு முழுவதும் குறையவில்லை. பல்வேறு மாநிலங்களில் மழை வெள்ளம் பாதிப்பு இருப்பதால், மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும், ஒத்திவைக்க வேண்டும் எனவும் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண், நீதிபதிகள் ஆர்எஸ் ரெட்டி, எம்ஆர் ஷா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.

அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தாதர் ஆஜராகி வாதிடுகையில், “பிஹாரில் மழை வெள்ளத்தால் சூழல் மோசமாக இருக்கிறது. இதில் கரோனா பரவலும் அதிகரித்து வருகிறது. பாட்னா, கயா இரு இடங்களில் மட்டும் நீட் தேர்வு மையங்கள் இருப்பதால், சில வாரங்களுக்குத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மற்றொரு மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.டிஎஸ் துளசி வாதிடுகையில், “கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படவில்லை. பின் எவ்வாறு அவர்களின் குழந்தைகள் நீட் தேர்வை எழுத முடியும்” எனத் தெரிவித்தார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான சோயிப் ஆலம் வாதிடுகையில், “தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு எதிராக மனுத்தாக்கல் செய்துள்ளோம். செப்டம்பர் 2-ம் தேதி வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் மாணவர்கள் யாருக்கேனும் ஜலதோஷம், காய்ச்சல் போன்றவை இருந்தால், அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நொய்டாவில் இன்னும் பல்வேறு இடங்களில் லாக்டவுன் அமலில் இருக்கிறது. தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு பாஸ் வழங்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள் அமர்வு கூறுகையில், “பல்கலைக்கழகத் தேர்வுக்கு வெளியிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகள் நீட் தேர்வுக்குப் பொருந்தாது. நீங்கள் கூறுவதுபோல் பொதுவாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது. பல்வேறு நகரங்களில் வார இறுதி லாக்டவுன் நீக்கப்பட்டுவிட்டது.

நீட் தேர்வுகளை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் நடத்தும் நிர்வாகிகள் செய்துவிட்டார்கள். ஏற்கெனவே ஜேஇஇ தேர்வுகள்நடந்து முடிந்துவிட்டன. இனி நீட் தேர்வு மட்டும்தான் இருக்கிறது. அனைத்தும் முடிந்துவிட்டன. மறு ஆய்வு மனுக்கள் மீதான விசாரணையும் கூட முடிந்துவிட்டது. ஆதலால், இந்த மனுக்களை விசாரிக்க முடியாது. தள்ளுபடி செய்கிறோம்” எனத் தெரிவித்தது.

இதற்கிடையே, 6 மாநிலங்களைச் சேர்ந்த கல்வி அமைச்சர்கள் சார்பில் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கடந்த 4-ம் தேதி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x