Published : 09 Sep 2020 08:39 AM
Last Updated : 09 Sep 2020 08:39 AM

மிகப்பெரிய ‘டிஜிட்டல்’ ஏற்றத்தாழ்வு; கல்வி பாதிக்கப்படுவதாக தேசிய புள்ளியியல் அமைப்பு தகவல்

நாடு முழுதும் கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக 6 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வகுப்புகள் என்ற மோஸ்தர் நடைமுறையில் உள்ளது, இதனால் எத்தனை மாணவர்கள் பயனடைகின்றனர் என்பது பற்றியும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் முறை பற்றியும் மாணவர்களுக்கு பாடங்கள் புரிவது புரியாமல் போவது பற்றியும் சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டில் பல்வேறு பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு இடையில் டிஜிட்டல் ஏற்றத்தாழ்வுகள், டிஜிட்டல் இடைவெளி பெரிய அளவில் கல்வியில் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தேசியப் புள்ளியியல் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

உதாரணத்துக்கு இமாச்சலப்பிரதேசத்தில் நகரப்பகுதிகளில் இண்டெர்நெட் இணைப்பு 70% க்கும் மேல் உள்ளது என்றால் ஒடிசாவில் 6%க்கும் கீழ்தான் டிஜிட்டல் வசதி உள்ளது. ஒடிசா போன்ற சில மாநிலங்களில் இணைய இணைப்பு வசதியெல்லாம் மிகப்பெரிய விஷயம் என்ற அளவில் நாட்டி டிஜிட்டல் இடைவெளி உள்ளது.

இந்நிலையில் தேசியப் புள்ளியியல் அமைப்பு மாநிலங்கள், நகரங்கள், கிராமங்கள், பலதரப்பட்ட வருவாய்ப் பிரிவினர் இடையே தொடர்ச்சியாக ஆய்வு நடத்தி வருகிறது. சமீபத்தில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இந்தியா முழுதும் 10 வீட்டுக்கு ஒரு வீட்டில்தான் கணினி உள்ளது. ஆனால் கால்பங்கு வீட்டுகளில் இண்டெர்நெட் வசதி உள்ளது. ஆனால் இண்டெர்நெட் வசதி உள்ள வீடுகல் பெரும்பாலும் நகரங்களில் உள்ளவையே. கிராமங்களில் 15% மக்களிடம்தான் இண்டெர்நெட் உள்ளது.

தலைநகர் டெல்லியில் அதிகபட்சமாக 55% வீடுகளில் இணைய இணைப்பு வசதி உள்ளது. இதைத் தவிர இமாச்சலம், கேரளா ஆகிய மாநிலங்களில் 50%-க்கும் கூடுதலான வீடுகளில் இணைய இணைப்பு வசதி உள்ளது. மாறாக ஒடிசாவில் 10 வீடுகளுக்கு ஒரு வீட்டில்தான் இணைய இணைப்பு உள்ளது. மற்ற 10 மாநிலங்களில் 20%க்கும் குறைவாகவே இண்டெர்நெட் இணைப்பு உள்ளது. மென்பொருள் ஹப்கள் உள்ள கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலும் இதுதான் நிலை.

இதில் மிகப்பெரிய இடைவெளி பொருளாதார நிலைதான். தேசியப் புள்ளியியல் அமைப்பு மக்கள் தொகையை 5 சமமான குழுவாகப் பிரித்துள்ளது. இவர்களது மாதாந்திர தனிச்செலவின அடிப்படையில் பிரித்துள்ளனர். ஒடிசாவில் கூட நகர மையங்களில் இருப்பவர்களிடத்தில் இண்டெர்நெட் வசதி உள்ளது. ஆனால் கிராமப்புற ஒடிசாவில் 2.4% தான் இணைய இணைப்பு வசதி.

கேரளாவில் டிஜிட்டல் ஏற்றத்தாழ்வு அவ்வளவாக இல்லை. கிராமப்புறங்களில் இங்கு 39% ஏழை வீடுகளில் கூட இணைய இணைப்பு வசதி உள்ளது. பணக்கார நகர்ப்புற வீடுகளில் 67% வீடுகளில் இணைப்பு உள்ளது. அசாமில் டிஜிட்டல் இடைவெளி மிகபெரியது. நகர்ப்புறங்களில் 80% வீடுகளில் இருக்கிறது என்றால் ஏழை கிராமப்புறங்களில் 94% வீடுகளில் இண்டெர்நெட் வசதி இல்லை.

இதோடு 7 வயதுக்கு மேற்பட்ட 5 இந்தியர்களில் ஒருவருக்கு எந்த மொழியிலும் வாசிக்கவோ, எழுதவோ தெரியவில்லை. ஆகவே டிஜிட்டல் இணைப்பில் நகரத்துக்கும் கிராமங்களுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள இடைவெளியினால் கல்வி பெருமளவு பாதிக்கப்பட்டு சமச்சீரான பரவல் இல்லை என்கிறது என்.எஸ்.ஓ. அறிக்கை.

நாட்டிலேயே கல்வியறிவு குறைவாக உள்ள மாநிலம் ஆந்திரா, இங்கு கல்வியறிவு விகிதம் 66.4%. ஆந்திராவை விடவும் வளர்ச்சி குறைவான மாநிலங்களான சத்திஸ்கரில் 77.3% கல்வியறிவு விகிதம் உள்ளது. ஜார்கண்டில் 74.3%, உ.பி.யில் 73%, கேரளா 96.2% கல்வியறிவுடன் டாப் இடத்தில் உள்ளது. டெல்லி 88.7%, உத்தராகண்ட் 87.6%, இமாச்சல் 86.6%.

-சிறப்புச் செய்தியாளர், தி இந்து (ஆங்கிலம்).

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x