ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சி.இ.ஓ. சந்தா கோச்சாரின் கணவர் கைது : அமலாக்கத் துறை அதிரடி

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சி.இ.ஓ. சந்தா கோச்சாரின் கணவர் கைது : அமலாக்கத் துறை அதிரடி
Updated on
1 min read

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரை நிதி மோசடி வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சந்தா கோச்சார். இவர் வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.1,875 கோடி கடன் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து அவர் அந்த பதவியில் இருந்து விலகினார்.

இந்த முறைகேடு தொடர்பாக சந்தா மற்றும் அவரது கணவரும், தொழில் அதிபருமான தீபக் கோச்சார் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் சந்தா மற்றும் தீபக் வசம் உள்ள ரூ.78 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை இந்த ஆண்டு தொடக்கத்தில் முடக்கியது.

இந்தநிலையில் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தீபக் கோச்சார் மற்றும் சந்தாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று இரவில் தீபக் கோச்சாரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

விசாரணையில் தீபக் கோச்சார் ஒத்துழைக்கவில்லை என்பதால் கைது செய்யப்பட்டதாக அமலாக்க துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று அவர் நிதிமோசடி தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்.

மேலும் அமலாக்கத் துறை குஜராத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் மருந்து நிறுவனம், மற்றும் பூஷன் ஸ்டீல் குழுமம் ஆகியவற்றுக்கும் கோச்சார் காலத்தில் வழங்கப்பட்ட வங்கிக் கடன் குறித்தும் அமலாக்கப்பிரிவு விசாரித்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in