Published : 08 Sep 2020 08:43 AM
Last Updated : 08 Sep 2020 08:43 AM

இந்தியா எல்லை தாண்டி வந்து  துப்பாக்கிச் சூடு நடத்துகிறது..இது ஆத்திரமூட்டும் செய்கை: சீனா கடும் குற்றச்சாட்டு 

பேங்காங் ஏரியின் தெற்குக் கரைப் பகுதியில் இந்திய ராணுவம் எல்லை தாண்டி வந்து எச்சரிக்கை விடுக்கும் விதமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது, இது ராணுவ ரீதியான தூண்டுதல் செயலாகும் என்று சீனா அறிக்கை இந்திய ராணுவம் மீது குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக இந்திய ராணுவத்தின் தரப்பில் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் இந்தியா துப்பாக்கிச் சூடு நடத்தி ராணுவ ரீதியாக பதற்றத்தை அதிகரிக்க முயற்சி செய்கிறது என்று சீனா குற்றம்சாட்டியுள்ளது.

லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியை தாண்டி வந்த இந்திய வீரர்கள் பாங்கோங் ஏரி சமவெளி பகுதிகளில், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீன ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. சீன ராணுவ செய்தி தொடர்பாளர் இது பற்றி கூறுகையில், “ எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியை சட்டவிரோதமாக கடந்த இந்திய ராணுவம், பாங்கோங் ஏரி மற்றும் ஷென்போ மலைப்பகுதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தியது.

சீன ராணுவத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்திய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. எனவே நிலமையை கட்டுக்க்குள் கொண்டு வர நாங்கள் பதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது” என்றார். எனினும், எந்த மாதிரியான பதில் நடவடிக்கை எடுக்கப்ட்டது என்பது பற்றி எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இந்திய ராணுவத்தின் செயல், மோசமான ஆத்திரமூட்டும் செயல்பாடு என விமர்சித்துள்ள சீன ராணுவம், இத்தகைய ஆபத்தான செயல்களை இந்திய ராணுவம் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம் எனவும் கூறியுள்ளது.

இந்தியா- சீனாவுக்கு இடையே சமீப காலமாக எல்லைப் பிரச்சினை அதிகரித்து வருகிறது. அண்மையில் லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறியதில் இருந்தே அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாட்டு ராணுவமும் எல்லையில் படைகளை குவித்துள்ளன.

எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க இருநாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்து கொண்டே இருக்கின்றன. எனினும், பதற்றம் தணிந்தபாடில்லை. எல்லைப் பதற்றத்துக்கு சீனாதான் காரணம் என்று இந்தியாவும், இந்தியாதான் காரணம் என்று சீனாவும் மாறி மாறி பரஸ்பரக் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

வியாழக்கிழமையன்று மாஸ்கோ ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்திய-சீன வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பில் இந்த புதிய பதற்றம் குறித்து இருவரும் பேசி முடிவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x