Published : 07 Sep 2020 08:47 PM
Last Updated : 07 Sep 2020 08:47 PM

அதிவேக ஏவுகணை ராக்கெட் இன்ஜின்; பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி

அதிவேக ஏவுகணை தயாரிப்புக்கான ராக்கெட் இன்ஜின் வெற்றிகரமாக விண்ணில் சோதிக்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதிவேக ஏவுகணை தயாரிப்புக்கான ராக்கெட் இன்ஜினை (HSTDV) ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேற்பாட்டு நிறுவனம் வெற்றிகரமாக பரிசோதித்தது.

அதிவேக ஏவுகணை தயாரிப்புக்காக ஸ்கிராம்ஜெட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ராக்கெட் இன்ஜின், ஒடிசாவில் உள்ள வீலர் தீவில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் ஏவுதளத்தில் இன்று காலை 11.03 மணிக்கு வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது

ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு வேகத்தில் செல்லும் அதிவேக ஏவுகணைகளைத் தயாரிக்கும் முயற்சியில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்(டிஆர்டிஓ) ஈடுபட்டுள்ளது. இந்த ஏவுகணைகளில் பொருத்தக்கூடிய ராக்கெட் மோட்டர்கள் தற்போது பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த ராக்கெட்டில் ஸ்கிராம்ஜெட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் எரிபொருளுடன், காற்றை உள்வாங்கி செயல்படும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

ஸ்கிராம்ஜெட் இன்ஜின் பொருத்தப்பட்ட அதிவேக ராக்கெட் (HSTDV) இன்று விண்ணில் ஏவி பரிசோதிக்கப்பட்டது. ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட ராக்கெட், விண்ணில் 30 கி.மீ தூரம் சென்றது. ஸ்கிராம் ஜெட் இன்ஜின் வெற்றிகரமாக செயல்பட்டு, திட்டமிடப்பட்ட பாதையில், வினாடிக்கு 2 கி.மீ வேகத்தில், இந்த ராக்கெட் சென்றது.

ராக்கெட் செல்லும் பாதை ரேடார்கள், எலக்ட்ரோ-ஆப்டிக்கல் கருவிகள் மற்றும் தொலை தூர கண்காணிப்பு மையம் மூலம் கண்காணிக்கப்பட்டது. இவற்றை கண்காணிக்க வங்க கடலில், கப்பல் ஒன்றும் அனுப்பப்பட்டிருந்தது.

அதிவேக ஏவுகணை தயாரிப்புக்கு பயன்படும் இந்த ராக்கெட்டின் அனைத்து உள்நாட்டு தொழில்நுட்பங்களும் வெற்றிகரமாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதற்காக டிஆர்டிஓ அமைப்பை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார். இந்த முக்கிய சாதனை , பிரதமரின் தற்சார்பு இந்தியா தொலை நோக்கை உணரவைப்பதாகவும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இந்த ராக்கெட் இன்ஜின் தயாரிப்பில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுடன் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். அவர்களை நினைத்து நாடு பெருமைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதிவேக ராக்கெட் திட்டத்தில் பணியாற்றிய அனைத்து விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு டிஆர்டிஓ தலைவர் சதீஷ் ரெட்டி பாராட்டு தெரிவித்தார். இந்த வெற்றிகர பரிசோதனை மூலம், அதிவேக ராக்கெட் (ஹைபர்சோனிக்) என்ஜின் தயாரிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் நுழைந்துள்ளது. இந்த ராக்கெட் என்ஜின், நவீன அதிவே ஏவுகணை தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து கூறியதாவது:

‘‘அதிவேக ஏவுகணை தயாரிப்புக்கான ராக்கெட் இன்ஜினை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேற்பாட்டு நிறுவனம் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. நமது விஞ்ஞானிகள் ஸ்கிராம்ஜெட் தொழில்நுட்பத்தின் உதவியடன் உருவாக்கியுள்ள ராக்கெட் இன்ஜின் ஒலியை விடவும் 6 மடங்கு வேகத்தில் செல்லக்கூடியது. இதுபோன்ற வல்லமை இன்று ஒரு சில நாடுகளில் மட்டுமே உள்ளது.’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x