

கரோனா வைரஸ் பரவும் காலத்தில் நாட்டில் உள்ள முதியோருக்கு கூடுதல் கவனிப்பும், அவர்களுக்கு முகக்கவசம், சானிடைசர் வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது பதில் அளிக்க மாநில அரசுகளுக்கு 4 வாரங்கள் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
முன்னாள் மத்தியஅமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான அஸ்வானிக் குமார் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். ஏற்கெனவே இந்த மனு கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி விசாரி்க்கப்பட்டது.
அப்போது, முதியோர்களுக்கு முகக்கவசம், சானிடைசர் வழங்க மாநிலங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும், மருத்துவமனைகளில் முதியோருக்கு கூடுதல் பிரிவுகள் ஏற்படுத்த வேண்டும், முதியோருக்கு முன்னுரிமை அளித்து சிகிச்சையளிக்க வேண்டும். முதியோர் நலனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகள் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், இதுவரை ஒடிசா, பஞ்சாப், மணிப்பூர் மாநிலங்கள் மட்டுமே போதுமான நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்திருந்தன.
இந்நிலையில், இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், ஆர்எஸ் ரெட்டி, எம்ஆர் ஷா ஆகியோர் முன்னிலையில் இன்று காணொலி வாயிலாக விசாரிக்கப்பட்டது. அப்போது மனுதாரர் மூத்த வழக்கறிஞர் அஸ்வானிக் குமார் ஆஜராகினார்.
அப்போது அஸ்வானிக் குமார் வாதிடுகையில், “ முதியோருக்கு கூடுதலான கவனிப்பும், பாதுகாப்பும் அவசியம். அவர்களுக்கு முகக்கவசம், சானிடைசர் வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடுங்கள். இதுவரை ஒடிசா, பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டுமே அந்த வசதிகளை செய்து கொடுத்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளன” எனத் தெரிவித்தார்
இந்நிலையில் மனுவை விசாரித்த நீதிபதிகள் அசோக் பூஷான், ஆர்எஸ் ரெட்டி, எம்ஆர் ஷா ஆகியோர், இந்த மனு மீது மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன, முதியோர் நலனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 4 வாரங்களுக்குள் மாநில அரசுகள் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.