Published : 07 Sep 2020 01:27 PM
Last Updated : 07 Sep 2020 01:27 PM

பெங்களூருவில் 27 வயது இளம் பெண்ணுக்கு 2 மாதத்தில் 2-வது முறையாக கரோனா தொற்று: கர்நாடக மருத்துவக் குழு ஆய்வு

பெங்களூரு

பெங்களூருவில் 27- வயது பெண் ஒருவர் இரண்டு மாதத்திற்குள் 2-ம் முறையாக கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மருத்துவ உயர்மட்டக்குழுவின் ஆய்வுக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள் படி கடந்த 24 மணிநேரத்தில் 90 ஆயிரத்து 802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 42 லட்சத்து 4 ஆயிரத்து 613 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,016 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 71 ஆயிரத்து 642 ஆக அதிகரித்துள்ளது.

உலகளவில் கரோனாவில் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் 5 இடங்களில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் இந்தியா, ரஷ்யா, பெரு ஆகிய நாடுகள் இருந்தன. இதில் அமெரிக்காதான் மோசமான பாதிப்பை கரோனாவில் அடைந்து வருகிறது. அந்நாட்டில் இதுவரை கரோனாவால் 64 லட்சத்து 60 ஆயிரத்து 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 250 பேர் உயிரிழந்தனர்.

2-வது இடத்தில் பிரேசில் நாடு இருந்த நிலையில், இந்தியா அந்நாட்டை முந்தியுள்ளது. இந்தியாவில் கரோனாவில் 42 லட்சத்து 4 ஆயிரத்து 613 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரேசிலில் கரோனாவில் 41 லட்சத்து 37 ஆயிரத்து 606 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் அதிகமான கரோனா நோயாளிகள் மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகா, உத்தரப்பிரதேசம், ஆந்திராபிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில்தான் கண்டறியப்படுகின்றனர்.

கர்நாடகாவில் தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்தநிலையில் தற்போது பரவல் வேகம் அதிகமாகியுள்ளது. அங்கு 4 லட்சம் பேருக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கையும் 6400-யை கடந்துள்ளது.

இந்தநிலையில் பெங்களூருவை சேர்ந்த 27 வயது கொண்ட இளம்பெண் ஒருவருக்கு கடந்த ஜூலையில் கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதன்பின்னர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். முழுமையாக குணமடைந்து அவருக்கு சோதனை செய்யப்பட்டு கரோனா இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் வீடு திரும்பினார்.

எனினும், ஒரு மாதத்திற்கு பிறகு அவருக்கு மீண்டும் கரோனா அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து, அவர் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் அந்த பெண்ணுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் 2 மாதங்களில் 2வது முறையாக அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சுதாகர் கூறியதாவது:

‘‘பெங்களூருவில் 27- வயது பெண் ஒருவர் இரண்டு மாதத்திற்குள் 2-ம் முறையாக கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். இதற்கான மருத்துவ காரணங்கள் குறித்து ஆய்வு செய்து வருறோம். கர்நாடக மாநிலத்தின் மூத்த மருத்துவர்கள் குழுவின் கூட்டத்தை கூட்டியுள்ளேன். இதுபற்றி அவர்கள் ஆய்வு செய்வார்கள். அதன் பிறகு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனக் கூறினார்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x