Published : 07 Sep 2020 09:24 AM
Last Updated : 07 Sep 2020 09:24 AM

ஜார்க்கண்ட்டில் கர்ப்பிணி மனைவி ஆசிரியர் பயிற்சி தேர்வு எழுதுவதற்காக 1,200 கி.மீ. தூரம் ஸ்கூட்டரில் அழைத்துச் சென்ற கணவர்

ஆசிரியர் பயிற்சி தேர்வுக்காக ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து ஸ்கூட்டரில் சுமார் 1,200 கி.மீ. பயணம் செய்து ம.பி.யின் குவாலியர் நகருக்கு வந்த இளம் தம்பதியர்.

குவாலியர்

ஜார்க்கண்ட் மாநில பழங்குடியின இளைஞர் ஒருவர் தனது கர்ப்பிணி மனைவியுடன் ஸ்கூட்டரில் 1200 கி.மீ. நீண்ட பயணம் செய்து ம.பி.யின் குவாலியர் நகருக்கு வந்துள்ளார். மனைவியை ஆசிரியராக பார்க்க வேண்டும் என்ற கனவே இதற்கு காரணம் என அவர் கூறியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கொட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் தனஞ்செய் ஹன்ஸ்டா. இவரது மனைவி சோனி ஹெம்ப்ராம். இவர் தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் சோனி ஹெம்ப்ராம் ஆசிரியர் பணிக்கான தொடக்கக் கல்வி டிப்ளமோ (டிஇஇ) தேர்வு எழுதுவதற்காக அவரை ம.பி.யின் குவாலியர் நகருக்கு 1,200 கி.மீட்டருக்கு மேல் ஸ்கூட்டரில் அழைத்து வந்துள்ளார் தனஞ்செய். கடந்த 28-ம் தேதி தங்கள் கிராமத்தை விட்டுப் புறப்பட்ட இவர்கள் கரடு முரடான சாலைகள் மற்றும் கன மழைக்கு மத்தியில் தொடர்ச்சியாக பல மணி நேரம் பயணம் செய்து 30-ம் தேதி குவாலியர் வந்துள்ளனர்.

கரோனா பாதிப்பு காரணமாக பொதுப் போக்குவரத்து இல்லாததால் குவாலியர் வருவதற்கு இத்தம்பதிக்கு ரயில் மற்றும் பேருந்து வசதி இல்லை. குஜராத்தில் கேட்டரிங் நிறுவனம் ஒன்றில் சமையல்காரராக பணியாற்றி வந்த தனஞ்செய், காரனோ பரவல் காரணமாக வேலை இழந்து 4 மாதங்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பினார். சேமிப்பு பணம் முழுவதும் தீர்ந்து விட்டதால், கார் பயணத்தை அவரால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

இப்பயணம் குறித்து தனஞ்செய் கூறும்போது, “இத்தேர்வு எங்களுக்கு மிகவும் முக்கியம். 10-ம் வகுப்புக்கு மேல் என்னால் படிக்கமுடியவில்லை. ஆசிரியர் பணி எனது மனைவியின் கனவு என்பதால், அதற்கான ஒரு வாய்ப்பை அவர் இழப்பதை நான் விரும்பவில்லை. இதுவே எங்கள் உடல்நலப் பிரச்சினையை புறந்தள்ளிவிட்டு துணிச்சலான பயணம் மேற்கொள்ளத் தூண்டியது” என்றார்.

சோனி கூறும்போது, “இந்த ஆண்டு ஜூலையில் நடைபெற வேண்டிய டிஇஇ இரண்டாம் ஆண்டுத் தேர்வு கரோனா பாதிப்பு காரணமாக தள்ளிப்போனது. இந்நிலையில் திடீரென செப்டம்பர் 1 முதல் 11 வரை தேர்வு தேதியை அறிவித்துவிட்டனர். எங்கள் ஸ்கூட்டர் பயணம் மற்றும் குவாலியரில் தங்கும் செலவுக்காக எனது நகையை விற்று பணம் புரட்டினோம்” என்றார்.

தேர்வுக்கு 36 மணி நேரம் முன்பு குவாலியர் வந்த இவர்கள், 15 நாள் தங்குவதற்கு வீட்டு உரிமையாளர் ஒருவரிடம் ரூ.1,500-க்கு பேரம் பேசிக்கொண்டிருந்தனர். உள்ளூர் ஊடகம் மூலம் இது மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிய வந்ததால் அவர்கள் தங்கும் வசதிக்கு ஏற்பாடு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x