Last Updated : 06 Sep, 2020 05:08 PM

 

Published : 06 Sep 2020 05:08 PM
Last Updated : 06 Sep 2020 05:08 PM

எதனீர் மடாதிபதி கேசவானந்த பாரதி தொடர்ந்த வழக்கு விவரம் என்ன? உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என்ன?

கோப்புப் படம்.

அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தும் உரிமை, அடிப்படை உரிமைகளைத் திருத்தும் உரிமை நாடாளுமன்றத்துக்கு இருக்கிறதா இல்லையா என்று கேரளாவின் எதனீர் மடத்தின் பீடாதிபதி கேசவானந்த பாரதி தொடர்ந்த வழக்கில் கடந்த 1973-ம் ஆண்டு வரலாற்றுச் சிறப்பு மிகுந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது.

அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்கில் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறதா என்பது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைப் பெற்றுக்கொடுத்த கேசவானந்த பாரதி இன்று காலமானார். அவருக்கு வயது 80.

ஆனால், கேசாவானந்த பாரதி தொடர்ந்த வழக்கைப் பார்ப்பதற்கு முன், அதற்கு முன்பாக கோலக்நாத் வழக்கைத் தெரிந்துகொண்டால்தான் கேசவானந்த பாரதி வழக்கின் சாரம்சத்தை எளிதாகப் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கோலக்நாத் எனும் நிலச்சுவான்தாரரின் 500 ஏக்கர் நிலத்தை பஞ்சாப் அரசு நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் கையகப்படுத்தியது. இதை எதிர்த்து கோலக்நாத் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

உச்ச நீதிமன்றத்தில் 1967 ஆம் ஆண்டு இந்த வழக்கை 11 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இந்திய மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளுக்கு எதிராகச் சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திறகு அதிகாரம் இல்லை, ஒருவேளை சட்டம் இயற்றி, 9-வது அட்டவணையில் சேர்த்தால் அதுவும் செல்லுபடியாகாது என்பது கோலக்நாத் சார்பில் நீதிமன்றத்தில் எடுத்து வைத்த வாதத்தின் சாரம்சம்.

வழக்கை விசாரித்த பெரும்பான்மையான நீதிபதிகள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளைக் குறைக்கவோ, கட்டுப்படுத்தவோ, நீக்கவோ நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளித்தனர்.

இந்தத் தீர்ப்பையடுத்து, அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு, 1971-ம் ஆண்டு, நவம்பர் 5-ம் தேதி 24-அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் மூலம் பிரிவு 13 மற்றும் 368-ல் கூடுதல் பிரிவுகளைச் சேர்த்தது.

அதன் முக்கிய அம்சம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளில் மாற்றம் செய்ய நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது என்பதாகும்.

இப்போது கேசவானந்த பாரதி வழக்கிற்கு வரலாம்.

மத்திய அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தைப் பயன்படுத்தி, கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் நூற்றாண்டுகளாகச் செயல்பட்டு வரும் ஆதி சங்கரரின் சிஷ்யர்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் எதீனர் மடத்துக்குச் சொந்தமான நிலங்களைக் கேரள அரசு இரு சட்டத் திருத்தங்கள் மூலம் கையகப்படுத்தியது.

அப்போது, எதரீனர் மடத்தின் பீடாதிபதியாக கேசவானந்த பாரதி செயல்பட்டு வந்தார். கேரள அரசு மடத்தின் நிலத்தைக் கையகப்படுத்துவதை எதிர்த்து கேசவானந்த பாரதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 1970ம்- ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் கேசவானந்த பாரதிக்கு மூத்த வழக்கறிஞர் நானி பால்கிவாலா ஆஜரானார்.

இந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.எம்.சிக்ரி 13 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைத்தார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கிய அடிப்படை உரிமைகளை மாற்றுவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தங்கள், 24, 25, 26 மற்றும் 29 செல்லதக்கதல்ல. மடத்துக்கு ஒரு வருமானம் இந்த நிலம் மட்டும்தான். ஆதலால், கையகப்படுத்தக்கூடாது என்று வாதிடப்பட்டது.

கடந்த 1972-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி தொடங்கிய வழக்கின் வாத, பிரதிவாதங்கள் 1973-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதிவரை நடந்தன. தொடர்ந்து 68 நாட்கள் இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அயோத்தி பாபர் மசூதி ராமஜென்ம பூமி வழக்குதான் இதற்கு அடுத்தபடியாக அதிக நாட்கள் தொடர்ந்து விசாரிக்கப்பட்ட வழக்காகும்.

இந்த வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வு 703 பக்கங்களில் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கைத் தலைமை நீதிபதி சிக்ரி அடுத்தாற்போல், கே.எம்.கண்ணா முக்கியமானவராகக் கருதப்பட்டார். இந்த வழக்கில் 7 நீதிபதிகள் ஒரு விதமான தீர்ப்பையும், 6 நீதிபதிகள் ஒரு தீர்ப்பையும் வழங்கினர்.

இதில் 7 நீதிபதிகள் தீர்ப்பின் சாரம்சமாக, “அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மாற்றுதற்கும், திருத்துவதற்கும் நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. அரசியலமைப்பின் 368-வது பிரிவின் கீழ் திருத்தம் செய்ய நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது, அதன் அடிப்படை அம்சங்களை மாற்றியமைக்கும் அதிகாரம் அதற்கு இல்லை” என்று தீர்ப்பளித்தனர்.

நீதிபதி கண்ணா தனது தீர்ப்பில் ‘அடிப்படைக் கட்டமைப்பு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அதாவது சட்டத்தின் கோட்பாட்டிற்கு இணங்காத அரசியலமைப்புத் திருத்தங்கள் மற்றும் சட்டங்களை மறு ஆய்வு செய்து ரத்து செய்ய நீதித்துறைக்கு அதிகாரம் உள்ளது என்றார்.

ஆனால், 6 நீதிபதிகள், நாடாளுமன்றத்துக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளை மாற்றும் அதிகாரம் இருக்கிறது என்று தீர்ப்பளித்தனர். ஆனால், பெரும்பான்மையாக 7 நீதிபதிகள் அளித்த தீர்ப்பே எடுத்துக்கொள்ளப்பட்டது.

அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதி என்னவாக இருக்க வேண்டும் என்பதற்கான விளக்கத்தையும், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகம் அதன் பகுதியாக இருக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்தது.

இந்த அமர்வில் இடம் பெற்றிருந்த 13 நீதிபதிகளில் 11 நீதிபதிகள் தனித்தனித் தீர்ப்புகளை வழங்கினர். பெரும்பாலும் பல கருத்துகளை நீதிபதிகள் ஏற்றாலும், சில கருத்துகளில் முரண்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x