

இந்தியாவில் இதுவரையில்லாத வகையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவில் பாதிக்கப்பட்டனர். ஒட்டுமொத்த பாதிப்பு 41 லட்சத்தைக் கடந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 90 ஆயிரத்து 632 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம் ஒட்டுமொத்தப் பாதிப்பு 41 லட்சத்து 13 ஆயிரத்து 811 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 7-ம்தேதி 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் கரோனா பாதிப்பு எட்டியுள்ளது. ஏறக்குறைய 13 நாட்களில் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஆறுதல் அளிக்கும் வகையில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவிலிருந்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 31 லட்சத்து 80 ஆயிரத்து 865 ஆகவும், 77.32 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8 லட்சத்து 62 ஆயிரத்து 320 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தப் பாதிப்பில் 20.96 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
கரோனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,065 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 70 ஆயிரத்து 626 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு சதவீதம் 1.72 சதவீதமாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக நேற்று 312 பேர் உயிரிழந்தனர், அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் 128 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 81 பேரும், ஆந்திராவில் 71 பேரும், பஞ்சாப்பில் 69 பேரும் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் 61 பேர், மேற்கு வங்கத்தில் 58 பேர், பிஹாரில் 34 பேர், மத்தியப் பிரதேசத்தில் 30 பேர், டெல்லியில் 25 பேர், ஹரியாணாவில் 22 பேர், சத்தீஸ்கரில் 19 பேர் உயிரிழந்தனர்
புதுச்சேரி, உத்தரகாண்டில் தலா 18 பேர், குஜராத், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் தலா 15 பேர் உயிரிழந்தனர். ராஜஸ்தானில் 14 பேர், கேரளாவில் 11 பேர், கோவா, தெலங்கானாவில் தலா 9 பேர், திரிபுராவில் 8 பேர், அசாம், ஒடிசாவில் தலா 7 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 4 பேர், அந்தமான் நிகோபர் தீவுகள், சண்டிகர், மணிப்பூர், மேகாலயாவில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.
ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி இதுவரை 4 கோடியே 88 லட்சத்து 31 ஆயிரத்து 145 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 10 லட்சத்து 92 ஆயிரத்து 654 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று 312 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்தப் பலி எண்ணிக்கை 26 ஆயிரத்து 276 ஆக அதிகரித்துள்ளது. 2 லட்சத்து 21 ஆயிரத்து 12 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று 61 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 7,748 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் 51 ஆயிரத்து 513 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லியில் 19 ஆயிரத்து 870 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 25 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,538 ஆக அதிகரித்துள்ளது.
குஜராத்தில் 16 ஆயிரத்து 334 பேர் சிகிச்சையில் உள்ளனர். 15 பேர் நேற்று உயிரிழந்ததையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 3,091 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 99,636 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று 128 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 6,298 ஆக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலத்தில் 21,867 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பலி எண்ணிக்கை 337 ஆக அதிகரித்துள்ளது.
ஆந்திராவில் ஒரு லட்சத்து 880 பேர் சிகிச்சையில் உள்ளனர். 71 பேர் நேற்று பலியானதையடுத்து ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,347 ஆக அதிரித்துள்ளது.
தெலங்கானாவில் 32 ஆயிரத்து 553 பேர் சிகிச்சையில் உள்ளனர். அங்கு நேற்று மட்டும் 9 பேர் பலியானதையடுத்து, உயிரிழப்பு 886 ஆக அதிகரித்துள்ளது''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.