

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 14-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கரோனா வைரஸ் காரணமாக கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன
ஆனால் கடந்த காலங்களில் 1962,1975, 1976, 1991, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு காரணங்களுக்காக 6 முறை மாநிலங்களவையில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த 2015 முதல் 19 வரையிலான 5 ஆண்டுகளில் மாநிலங்களவை கேள்வி நேரத்தில் வெறும் 40 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. பல்வேறு அமளிகளால் 60 சதவீத நேரம்வீணடிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் மாநிலங்களவையின் 332 அமர்வுகளில், ஒரு அமர்வுக்கு ஒரு மணி நேரம் வீதம் 332 மணி நேரம் கேள்வி கேட்பதற்காக ஒதுக்கப்பட்டது. இதில் 133 மணி 17 நிமிடங்கள் மட்டுமே கேள்வி கேட்கப்பட்டு அமைச்சர்கள் பதில் அளித்துள்ளனர். இந்தத் தகவலை மாநிலங்களவை ஆய்வுப் பிரிவு வெளியிட்டுள்ளது.
குறுகிய காலம் மட்டுமே கூட்டத் தொடர் நடப்பதாக எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டை அரசுத் தரப்பு மறுத்துள்ளது. இதுதொடர்பாக பேசிய மூத்த உறுப்பினர் ஒருவர், டெல்லியில் எம்.பி.க்கள் குறுகிய கால இடைவெளியில் மட்டுமே இருக்க வேண்டும் என்று மத்திய அரசுவிரும்புகிறது. அதன்படி நாடாளுமன்றத்தில் பங்களிப்பை அளித்த பிறகு உடனே தங்கள் தொகுதிக்கு திரும்பிவிடுவோம் என்றார். சிலமாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர்கள் ஒன்று முதல் மூன்றுநாட்களுக்குள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் 18 நாட்கள்நடைபெறவுள்ளது குறிப்பிடத் தக்கது.