Published : 04 Sep 2020 10:50 PM
Last Updated : 04 Sep 2020 10:50 PM

‘‘அமைதி ஏற்பட நம்பிக்கை தேவை" - சீனாவுக்கு ராஜ்நாத் சிங் பதில்

உலக மக்கள்தொகையில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் வசிக்கும் எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் அமைதி நிலவவும், பாதுகாப்பு ஏற்படவும் நம்பிக்கை தேவை என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் 6 முனைகளில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இருநாடுகளின் வீரர் களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் கர்னல் சந்தோஷ் பாபு, தமிழக வீரர் பழனி உட்பட 20 பேர் வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததை இந்திய, அமெரிக்க உளவுத் துறைகள் உறுதி செய்தன. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் எழுந்து, பின்னர் தணிந்தது.

கடந்த 29-ம் தேதி நள்ளிரவில் லடாக் பான்காங் ஏரியின் தெற்கு பகுதியில் சீன வீரர்கள் மீண்டும் ஊடுருவ முயற்சி செய்தனர். இந்த ஊடுருவலை இந்திய வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். இதன் காரணமாக இந்தியா, சீனா இடையே மீண்டும் போர் பதற்றம் எழுந்துள்ளது. பதற்றத்தை தணிக்க கடந்த சில நாட்களாக இரு நாடுகளின் ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.

‘லடாக் எல்லை பிரச்சினைக்கு அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியவில்லை என்றால் ராணுவ ரீதியாக தீர்வு காணப்படும்’ என்று தலைமை தளபதி பிபின் ராவத் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்தநிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு மாஸ்கோவில் நடைபெறுகிறது. மாஸ்கோவில் நடைபெற்று வரும் அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வீ பங்கே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளில், பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கும், சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு, பிரச்சனைகளை தீர்ப்பதும் இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் ஆகும் .

இந்தியாவும் சீனாவும் எஸ்சிஓ உறுப்பினர்களாக உள்ளன. இது எட்டு உறுப்பு நாடுகளைக் கொண்ட பிராந்திய அமைப்பாகும். இது முக்கியமாக பாதுகாப்பு பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் "உலக மக்கள்தொகையில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் வசிக்கும் எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் அமைதி நிலவவும், பாதுகாப்பு ஏற்படவும் நம்பிக்கை தேவை " என்று கூறினார். சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வீ பங்கே முன்னிலையில் ராஜ்நாத் சிங், இதனை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x