Last Updated : 04 Sep, 2020 08:33 AM

 

Published : 04 Sep 2020 08:33 AM
Last Updated : 04 Sep 2020 08:33 AM

தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி: ஆந்திர அரசின் மனு மீது 25-ல் உச்ச நீதிமன்றம் விசாரணை

ஆந்திர மாநில‌ அரசு 1-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரையிலான தொடக்கக் கல்வியை தெலுங்கு வழியில் இருந்து ஆங்கில வழி கல்வி முறைக்கு மாற்றுவதாக அறிவித்தது. இந்த ஆங்கில வழி கல்வி முறைக்கான அரசாணையை ரத்து செய்யக்கோரி கடந்த ஏப்ரலில் சீனிவாஸ் குண்டிப்பள்ளி என்பவர் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம் கட்டாய ஆங்கில மொழிக்கல்வி என்பது கல்வி சட்டத்துக்கு எதிரானது என்று கூறி, அந்த அரசாணைக்கு தடை விதித்தது.

இதை எதிர்த்து ஆந்திர அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று வீடியோ கான்ஃப்ரன்ஸிங் மூலம் வ‌ழக்கை விசாரித்தது. அப்போது ஆந்திர அரசின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.வி. விஸ்வநாதன், "பிள்ளைகள் ஆங்கில வழிக்கல்வி முறையில் பயில்வதையும், அதன் மூலம் சிறப்பான வாய்ப்புகளை பெறுவதையுமே பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புகிறார்கள். அதனால்தான் ஆந்திர அரசு இந்த முற்போக்கான கொள்கை முடிவை எடுத்திருக்கிறது. எனவே உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.

அரசுத் தரப்பின் வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும் வழக்கின் மனுதாரரான சீனிவாஸ் குண்டிப்பள்ளி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணனை 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை வரும் 25-ம் தேதி விரிவாக விசாரிப்பதாகக் கூறி, வழக்கை ஒத்தி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x