Last Updated : 03 Sep, 2020 09:01 PM

 

Published : 03 Sep 2020 09:01 PM
Last Updated : 03 Sep 2020 09:01 PM

வங்கியில் கடன்பெற்றவர்களுக்கு நிம்மதி: மறு உத்தரவு வரும்வரை வங்கிக் கணக்கை வாராக்கடனாக அறிவிக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு 

கரோனா வைரஸ் காலத்தில் பெரும் இடர்ப்பாடுகளையும், அழுத்தங்களையும் சந்தித்துவரும் வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில், ஆகஸ்ட் 31-ம் தேதிவரை வாராக் கடனாக அறிவிக்கப்படாத வங்கிக் கணக்குகள் அனைத்தையும், மறு உத்தரவு வரும் வரை வாராக் கடனாக அறிவிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிகளில் பெறப்பட்ட தனிநபர் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், கடன் அட்டை மீதான கடன் உள்ளிட்ட அனைத்துத் தவணைகளையும் செலுத்துவதில் இருந்து கால அவகாசம் அளிக்கப்பட்டது.

இருப்பினும், கடனுக்கான வட்டியைச் சேர்த்து வசூலிக்கும்போது செலுத்த வேண்டிய தவணைக் காலம் அதிகரிப்பதோடு கடன், வட்டி சுமை அதிகரிக்கும். இதைப் பல்வேறு தரப்பினரும் சுட்டிக் காட்டினர். சலுகை என்றால் குறைந்தபட்சம் இந்தக் காலகட்டத்துக்கான வட்டியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலி யுறுத்தப்பட்டது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆக்ராவைச் சேர்ந்த கஜேந்திர சர்மா என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையில் நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா அமர்வு இந்த மனுவை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தபோது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், “கடன் தவணைகள் செலுத்தும் காலத்தை 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும். ஆனால், வட்டிக்கு வட்டி விதிப்பதை ரத்து செய்வது குறித்து வங்கிகளின் தலைவர்கள், ரிசர்வ் வங்கி, மத்திய அரசு ஆகியவை ஆலோசித்த பின்புதான் தெரிவிக்க முடியும். அதற்கு அவகாசம் தேவை” எனக் கோரினார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையில் மனுதாரர்கள் தரப்பில் வாதம் நடந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி அசோக் பூஷண் தலைமையில், நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா அமர்வு முன் விசாரிக்கப்பட்டது.

வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரிஸ் சால்வேயும், மத்திய அரசு, ரிசர்வ் வங்கி சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் ஆஜராகினர்.

அப்போது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், “வங்கித்துறைதான் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. கரோனா பாதிப்பில் ஒவ்வொரு துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அளித்த சுற்றறிக்கையின்படி கால அவகாசம் கொடுக்கப்பட்ட மாதங்களில் கடன் தவணை செலுத்தாத வங்கிக் கணக்குகள் வாராக்கடனில் சேர்க்கப்படாது என்று ஏற்கெனவே மத்திய அரசு கூறியிருக்கிறது.

கடனுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய முடியாது. ஆனால், கடன் பெற்றவர்களுக்கான அழுத்தத்தைக் குறைக்க முடியும். அவகாசம் கொடுக்கப்பட்டதன் நோக்கமே, கடன் பெற்றவர்கள் கரோனா காலத்தில் செலுத்த முடியாத சிரமங்களைக் குறைக்கத்தான்'' எனத் தெரிவித்தார்.

அப்போது ஹரிஸ் சால்வே குறுக்கிட்டு, “அடுத்த இரு மாதங்களுக்கு எந்த வங்கிக் கணக்கும் வாராக்கடனாக அறிவிக்கப்படாது” எனத் தெரிவித்தார்.

அதற்கு துஷார் மேத்தாவிடம், நீதிபதிகள், “அப்படியென்றால், வங்கியில் கடன் பெற்றவர்கள் அடுத்த இரு மாதங்களுக்கு மட்டும்தான் அவர்கள் வங்கிக் கணக்கு வாராக் கடனில் சேர்க்கப்படாமல் இருக்கும். இந்த இடைப்பட்ட இரு மாத காலத்துக்குக் கடன் பெற்றவர்கள் மீது எந்த நடவடிக்கையும் வங்கிகள் எடுக்கக்கூடாது” எனத் தெரிவித்தனர்.

அதன்பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “ 2020 ஆகஸ்ட் 31-ம் தேதிவரை வாராக் கடனாக அறிவிக்கப்படாத வங்கிக் கணக்குகள், மறு உத்தரவு வரும்வரை அந்த வங்கிக் கணக்குகளை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது. அதேசமயம், கடனுக்கான வட்டிக்கு வட்டி விதிக்கும் விவகாரத்தையும் கவனத்தில் கொண்டிருக்கிறோம். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 10-ம் தேதி நடக்கும்” என உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x