Last Updated : 03 Sep, 2020 06:53 PM

 

Published : 03 Sep 2020 06:53 PM
Last Updated : 03 Sep 2020 06:53 PM

நிர்மலா சீதாராமன் பதவியில் நீடிக்க கூடாது; நாட்டை நிதி அவசர நிலையை நோக்கி மோடி அரசு தள்ளுகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

தேசத்தை நிதி அவசர நிலையை நோக்கி மோடி அரசு உந்தித் தள்ளுகிறது. பொருளாதாரச் சீரழிவுக்குக் காரணமான மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைப் பதவியில் நீடிக்க கூாடது என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

நாட்டின் நடப்பு நிதியாண்டின் முதலாம் காலாண்டு பொருளாதார அறிக்கையை கடந்த இரு நாட்களுக்கு முன் மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டது. அதில், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் பொருளாதாரம் 23.9 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருந்தது.

இந்தப் பொருளாதார வீழ்ச்சி குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா காணொலி வாயிலாக ஊடகங்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''நாட்டின் ஜிடிபி நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் மோசமாகச் சரிந்துள்ளது. இதனால் எதிர்மறையான விளைவுகளால் ஒவ்வொரு இந்தியரும் பாதிக்கப்படுவார்கள். இந்த நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக ஜிடிபி 11 சதவீதம் வீழ்ச்சி அடைந்தாலே இந்தியர்கள் ஒவ்வொருவரின் வருமானத்திலும் தலா ரூ.15 ஆயிரம் குறைய வாய்ப்புள்ளது.

நாட்டின் பொருளாதாரத்துக்குப் பெரும் சேதத்தையும், பெருத்த அடியும் விழக் காரணமாக இருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இனிமேல் அந்தப் பதவியில் நீடிக்கக் கூடாது. நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுபோன்ற பொருளாதார வீழ்ச்சியைக் கண்டதில்லை.

பொருளாதாரச் சிதைவின் இருள் மேகங்கள் நம்மைச் சூழ்ந்துள்ளன. மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவை அழிக்கப்பட்டுள்ளன. வர்த்தகம், சிறு, குறுந்தொழில்கள் பாழடைந்துள்ளன. ஜிடிபி அழிக்கப்பட்டதால், பொருளாதாரமும் அழிக்கப்படுகிறது. இந்தியாவின் பொருளாதாரச் சீர்குலைவுக்கும், நிதி அவசர நிலையை நோக்கியும் பாஜக அரசு தள்ளுகிறது.

பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, லாக்டவுன் ஆகியவை பிரதமர் மோடியின் ராஜதந்திர நடவடிக்கைகள் அல்ல. பேரழிவை உண்டுசெய்யும் நடவடிக்கைகள். கடந்த 6 ஆண்டுகளாக மோடி அரசு பொருளாதரத்தைச் சூறையாடியது. இப்போது தனது இயலாமையையும், திறமையின்மையையும் மறைக்க கடவுளின் செயல் என்று மத்திய அரசு கூறுகிறது.

கடந்த 73 ஆண்டுகளில் தனது சொந்தத் தவறுகளுக்குக் கடவுள் மீது பழிபோட்ட முதல், ஒரே அரசு மத்தியில் ஆளும் பாஜக அரசுதான் என்பதைச் சொல்லவே வேதனையாக இருக்கிறது.

மோடி அரசின் அழிகாலத்திலிருந்து மீண்டு, இந்தியாவின் ஆசைகளையும், நம்பிக்கைகளையும் மீட்டெடுக்கும் நேரம் வரும்.

பணவீக்கம் அதிகரித்து சாமானிய மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வரிகள் உயர்த்தப்பட்டதால், பொருளாதாரம் சரிந்து, மக்களின் முதகெலும்பை உடைத்துள்ளது.

மோடி அரசில் இந்தியா நம்பிக்கை பற்றாக்குறையில் இருக்கிறது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களிடம் கேளுங்கள். வங்கியிலும் கடன் கிடைக்கவில்லை, நிதியுதவியும் கிடைக்கவில்லை. நிதியமைச்சரின் வார்த்தைக்கும் எந்த அர்ததமும் இல்லை என அவர்கள் சொல்வார்கள்.

மத்திய அரசின் மீது மாநில அரசுகளுக்கு நம்பிக்கை இழந்துவிட்டது. வேதனையான சூழல்தான் நிலவுகிறது. மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவையையும், இழப்பீட்டையும் தராத கடனாளியாக மத்திய அரசு இருக்கிறது. இது கூட்டாட்சியின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்''.

இவ்வாறு சுர்ஜேவாலா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x