Last Updated : 03 Sep, 2020 03:18 PM

 

Published : 03 Sep 2020 03:18 PM
Last Updated : 03 Sep 2020 03:18 PM

பிஎம் கேர்ஸ் அறக்கட்டளைக்கு தனது சேமிப்பிலிருந்து ரூ.2.25 லட்சம் நன்கொடை அளித்த பிரதமர் மோடி; ஒட்டுமொத்தமாக ரூ.103 கோடிக்கு மேல் அதிகரிப்பு

பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை நிதிக்கு தனது சேமிப்பிலிருந்து ரூ.2.25 லட்சம் நன்கொடையாக பிரதமர் மோடி அளித்துள்ளார். இதுவரை அவர் சார்பில் ரூ.103 கோடிக்கும் அதிகமாக நன்கொடை வழங்கப்பட்டுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை தொடங்கப்பட்ட 5 நாட்களில் ரூ.3,076.62 கோடி நிதி கிடைத்தகாக நேற்று தணிக்கை ஆய்வறிக்கை தகவல் வெளியிட்டது. அந்த நன்கொடை அளித்தவர்களின் பெயரை வெளியிடுமாறு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.

இந்தச் சூழலில் பிரதமர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “பிரதமர் மோடி, பொதுக் காரணங்களுக்காக ஏராளமாக நன்கொடை அளித்துள்ளார். பெண் குழந்தைகளின் கல்விச் செலவு, கங்கையைச் சுத்தப்படுத்துதல் எனப் பல்வேறு பணிகளுக்கு பிரதமர் மோடி நன்கொடை அளித்துள்ளார்.

அவ்வாறு பிரதமர் மோடியின் சொந்த சேமிப்பு முதல், அவர் பெற்ற பரிசுப்பொருட்கள், பரிசுத்தொகை ஆகியவற்றைச் சேர்த்தால், ரூ.103 கோடிக்கு மேல் அவர் நன்கொடை செய்துள்ளார்.

சமீபத்தில் பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை தொடங்கப்பட்டவுடன், தனது சொந்த சேமிப்பிலிருந்து ரூ.2.25 லட்சத்தை நன்கொடையாக பிஎம் கேர்ஸ் நிதிக்கு பிரதமர் மோடி வழங்கினார்.

அதுமட்டுமல்லாமல் கடந்த 2019-ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் நடந்த கும்பமேளா விழாவில் பக்தர்களுக்கு சுகாதார வசதிகளைச் செய்து வருவதற்காக தனது சொந்த சேமிப்பிலிருந்து ரூ.21 லட்சத்தை பிரதமர் மோடி அன்பளிப்பாக வழங்கினார்.

கடந்த 2019-ம் ஆண்டு தென்கொரியா அரசு சார்பில் சியோல் அமைதிப் பரிசு பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. அந்த விருதில் ரூ.1.30 கோடி ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. அந்தத் தொகையை பிரதமர் மோடி கங்கையைச் சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு நன்கொடையாக வழங்கினார்.

தான் பெற்ற பரிசுப்பொருட்கள், நினைவுப்பொருட்கள் அனைத்தையும் பிரதமர் மோடி சார்பில் ஏலம் விடப்பட்டது. அதில் ரூ.3.40 கோடி கிடைத்தது. அந்தத் தொகையையும் கங்கையைச் சுத்தப்படுத்தும் பணிக்கு பிரதமர் மோடி நன்கொடையாக வழங்கினார்.

குஜராத்தில் முதல்வர் பதவியை விட்டு 2014-ம் ஆண்டு விலகும்போது, தன்னிடம் இருந்த சேமிப்பான ரூ.21 லட்சத்தை குஜராத் அரசின் பெண் குழந்தைகள் கல்வித் திட்டத்துக்கு நன்கொடையாக பிரதமர் மோடி வழங்கினார்.

குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது அவருக்குக் கிடைத்த பரிசுப்பொருட்கள், நினைவுப்பொருட்களை ஏலம் விட்டதில் ரூ.89.96 கோடி கிடைத்தது. அனைத்துத் தொகையையும், பெண் குழந்தைகள் கல்விக்காக பிரதமர் மோடி நன்கொடையாக வழங்கினார்.

கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து பிரதமர் மோடி பெற்ற பரிசுப்பொருட்களை ஏலம் விட்டதில் கிடைத்த ரூ.8.35 கோடியையும் கங்கையைச் சுத்தப்படுத்தும் பணிக்காக பிரதமர் மோடி அன்பளிப்பாக வழங்கினார்” என அந்த அதிகாரி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x