Last Updated : 03 Sep, 2020 12:16 PM

 

Published : 03 Sep 2020 12:16 PM
Last Updated : 03 Sep 2020 12:16 PM

வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய பாஜக எம்எல்ஏ டி ராஜா சிங்கின் முகநூல் கணக்கு நீக்கம்: ஃபேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை

பாஜக எம்எல்ஏ ராஜா சிங் : படம் ஏஎன்ஐ

புதுடெல்லி


வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக புகார் கூறப்பட்ட தெலங்கானா பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங்கின் ஃபேஸ்புக் கணக்கு, இன்ஸ்டாகிராம் கணக்கு நீக்கப்பட்டு, அவரை ஃபேஸ்புக் நிறுவனம் தடை செய்துள்ளது.

பாஜக எம்எல்ஏ ராஜா சிங் தனது ஃபேஸ்புக் கணக்கில் மதவிரோதத்தைத் தூண்டும் வகையிலும், வெறுப்புணர்வை பரப்பும் கருத்துக்களைத் தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. முஸ்லிம்கள் குறித்தும், ரோஹிங்கியா அகதிகளை சுட்டுத் தள்ளவேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களைப் பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பாக கடந்த மாதம் 14-ம் தேதி அமெரி்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது. இந்தியாவில் ஃபேஸ்புக் வாயிலாக வெறுப்புணர்வை, மத துவேஷத்தை பரப்பும் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. ஆனால், ஃபேஸ்புக் இந்தியா நிறுவனம் ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அ அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று செய்தி வெளியிட்டிருந்தது.

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளேட்டின் செய்தி இந்தியாவில் பெரும் பிரச்சினையை கிளப்பியது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதை கையிலெடுத்து, இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் விசாரணை நடத்த வேண்டும், இந்தியப் பொறுப்பாளர்களை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும், தகவல்தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்றக் குழு, ஃபேஸ்புக் இந்தியாவின் அதிகாரிக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு வருமாறு கோரியது. அதன்படி, நேற்று ஃபேஸ்புக் இந்தியாவின் அதிகாரி அஜித் மோகன், நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராகி 2 மணிநேரம் விளக்கம் அளித்தார்.

இந்த சூழலில் பாஜக எம்எல்ஏ ராஜாசிங் அளித்த பேட்டியில் கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து தனது ஃபேஸ்புக் கணக்கை யாரோ ஹேக் செய்து விட்டார்கள். ஆதலால், நான் அந்த கருத்துக்களைப் பதிவிடவில்லை. நான் ட்விட்டர் மற்றும் யூடியூப் கணக்கு மட்டுமே வைத்திருக்கிறேன் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கின் ஃபேஸ்புக் கணக்கும், இன்ஸ்ட்டாகிராம் கணக்கையும் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட அறிவிப்பில், “ நாங்கள் ராஜா சிங்கின் ஃபேஸ்புக் கணக்கையும் இன்ஸ்டாகிராம் கணக்கையும் தடை செய்து நடவடிக்கை எடுத்துள்ளோம்.
எங்கள் நிறுவனத்தின் கொள்கைக்கு விரோதமாக தடை செய்யப்பட்ட கருத்துக்களை ராஜா சிங் தெரிவித்ததாலும், பரப்பியதாலும், வெறுப்புக் கருத்துக்களை பரப்பியதாலும் அவரின் கணக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறுபவர்களை ஆய்வு செய்யும் பணி விரிவானது. அந்த முடிவுக்கு இது இட்டுச் சென்றுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக்கில் மட்டும் ராஜா சிங்கிற்கு 30 லட்சம் பின்தொடர்பவர்கள் இருந்தனர். இப்போது ராஜா சிங் கணக்கு முற்றிலும் நீக்கப்பட்டதால் அவரின் எந்த பதிவையும் இனிமேல் காண முடியாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x