‘‘கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது’’ - ஒவைஸி கண்டனம்

‘‘கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது’’ - ஒவைஸி கண்டனம்
Updated on
1 min read

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 14-ம் தேதி தொடங்கி வார விடுமுறையின்றி, அக்டோபர் 1-ம் தேதிவரை நடக்கிறது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் இரு அவைகளும் இயங்கும்.

கரோனா வைரஸ் சூழலைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்றக் கூட்டம் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரையிலும், பின்னர் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடக்கும். காலை ஷிப்ட்டில் மாநிலங்களவை இயங்கும், மாலை ஷிப்ட்டில் மக்களவை இயங்க உள்ளது. அதாவது காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணிவரை மாநிலங்களவை செயல்படும். மாலை 3 மணிமுதல் இரவு 7 மணி வரை மக்களவை செயல்படும்.

கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இல்லை. தனிநபர் மசோதாவும் இல்லை. கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரமும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படும் என்று மக்களவை, மாநிலங்களவைச் செயலாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி கூறுகையில், ‘‘நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்திக்கு எதிரானது. இதுகுறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்குக் கடிதம் எழுதியுள்ளேன். அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையான அதிகாரப் பகிர்வு என்ற அடிப்படையை பாஜக அரசு உடைக்கிறது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது’’ எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in