Published : 02 Sep 2020 04:43 PM
Last Updated : 02 Sep 2020 04:43 PM

காஷ்மீரில் அடுத்த அதிரடி; இந்தி, ஆங்கிலம் உட்பட 5 அலுவல் மொழிகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி

காஷ்மீரில் அடுத்த அதிரடி மாற்றமாக உருது, டோக்ரி, காஷ்மீரி, இந்தி, ஆங்கிலம் என 5 மொழிகளுக்கு மாநிலத்தின் அலுவல் மொழியாக அங்கீகரித்து மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரான 370 பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதிரத்து செய்யப்பட்டது. அதன்பின் அந்த மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது.

இந்தநிலையில் காஷ்மீரில் அடுத்த அதிரடி மாற்றமாக உருது, டோக்ரி, காஷ்மீரி, இந்தி, ஆங்கிலம் என 5 மொழிகளுக்கு மாநிலத்தின் அலுவல் மொழியாக அங்கீகரித்து மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

காஷ்மீரில் தற்போது உருது மற்றும் காஷ்மீரி ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே அலுவல் மொழிகளாக உள்ளன. பிற மாநிலங்களைச் சேர்ந்த வால்மீகி உள்ளிட்ட சமூகத்தினர் காஷ்மீரில் குடியேற ஒப்புதல் அளித்து அண்மையில் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அடுத்த பெரிய நடவடிக்கையாக அலுவல் மொழிகள் எண்ணிக்கையை 5 ஆக உயர்த்தப்பட்டுள்ளன.

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர்

பிரகாஷ் ஜவடேகர்

செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘ஜம்மு காஷ்மீர் அலுவல் மொழிச் சட்டம் 2020-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் ஜம்மு-காஷ்மீரின் அலுவல் மொழியாக உருது, டோக்ரி, காஷ்மீரி, இந்தி, ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. காஷ்மீர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

இதனை குறிப்பிட்டு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கும் தகவல் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் அலுவல் மொழிச் சட்டம் 2020 இந்த மாதம் 14-ம் தேதி கூடவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x