

கேரளாவைச் சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர்கள் நிதி மோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பத்தனம்திட்டா மாவட்டத்தின் வகயார் கிராமத்தைச் சேர்ந்த பாப்புலர் ஃபைனான்ஸ் நிதி நிறுவனத்தின் மீது நிதி மோசடி புகார்கள் வந்துள்ள நிலையில் காவல் துறை விசாரணையில் இறங்கியுள்ளது.
இதுகுறித்து பத்தனம்திட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.ஜி.சைமன் கூறியதாவது:
பாப்புலர் ஃபைனான்ஸ் நிதி நிறுவனத்தின் மீது மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் புகார்கள் பதிவாகியுள்ளன. இந்தப் புகார்களில் குறிப்பிடப்பட்டுள்ள மோசடி மதிப்பு ரூ.300 கோடி ஆக உள்ளது. மேலும் இந்நிதி நிறுவனத்தில் பொதுமக்களின் முதலீடு சுமார் ரூ.2,000 கோடி அளவில் இருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த முதலீடு பாதுகாப்பாக இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு நிதி மாற்றப்பட்டு மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட புகார்களின் அடிப்படையில் அதன் நிர்வாக இயக்குநர் தாமஸ் டேனியல் மற்றும் அவரது மனைவியும் பங்குதாரருமான பிரபா இருவரும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். இவர்களின் மகள்கள் ரினு மரியா தாமஸ், ரியா அன்னா தாமஸ் இருவரும் நிறுவனத்தின் நிர்வாகிகள் ஆவர். இவர்கள் தலைமறைவான நிலையில் விமான நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. வெளிநாடு செல்ல இருந்த இவர்கள், டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
மேலும் இந்த நிதி நிறுவனம் ரிசர்வ் வங்கியிடம் தேவையான உரிமங்களை பெறாமலேயே இயங்கி வந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.