Published : 30 Aug 2020 10:40 AM
Last Updated : 30 Aug 2020 10:40 AM

சீன ஆன்லைன் சூதாட்ட செயலிகளை நடத்தும் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கம்: பெரிய வலைப்பின்னல் அம்பலம்- அமலாக்கத்துறை அதிரடி 

புதுடெல்லி

சீன ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் செயலியை நடத்திக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் ரூ.46.96 கோடி பெறுமான வங்கிக் கணக்குகளை அமலாக்க இயக்குனரகம் முடக்கி உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆன்லைன் சீன சூதாட்டச் செயலிகள் 90க்கும் மேற்பட்ட இணையதளங்கள் மூலம் நடத்தப்பட்டு வந்தது அடையாளம் காணப்பட்டுள்ளது, இந்நிலையில் அமலாக்க இயக்குனரகம் வெள்ளிக்கிழமையன்று இந்த நிறுவனங்களின் அலுலவகங்களில் ரெய்டு நடத்தியது. இதோடு மட்டுமல்லாமல் இந்நிறுவனங்களின் இயக்குநர்கள், கணக்குத் தணிக்கையாளர்கள் வீடுகளிலும் டெல்லி, குருகிராம், மும்பை, புனே என்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இந்தச் சோதனையில் 17 ஹார்டு டிஸ்க்குகள், 5 மடிக்கணினிகள் மற்றும் போன்கள் சிக்கின.

“ஹெச்.எஸ்.பி.சி 4 வங்கிக் கிளைகளில் வைக்கப்பட்டிருந்த கணக்குகள் முடக்கப்பட்டன, இதன் மூலம் இந்நிறுவனங்களின் ரூ.46.96 கோடி முடக்கப்பட்டது” என்று அமலாக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தியாவுக்கு வெளியேயிருந்து சட்ட விரோத ஆன்லைன் சூதாட்ட செயலிகள் இயக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

டோக்கிபே டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட், மற்றும் லிங்க்யுன் டெக்னாலஜி தனியார் நிறுவனம் ஆகியவற்றின் மீது ஹைதராபாத் சைபர் கிரைம் துறை அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை அமலாக்க இயக்குனரகம் மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக பெய்ஜிங் டுமாரோ பவர் நிறுவனத்தின் யான் ஹோ என்ற சீன நாட்டு நபரை போலீசார் கைது செய்தனர். இவரது இரண்டு இந்திய சகாக்களான தீரஜ் சர்க்கார், அங்கிட் கபூர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக அமலாக்கத்துறை கூறும்போது, சீன நாட்டவர்கள் இங்குள்ள சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட்கள் உதவியுடன் பல நிறுவனங்களை இந்தியாவில் நடத்தி வருகின்றனர். இதற்காக உள்நாட்டு டம்மி இயக்குநர்களையும் நியமித்துள்ளனர். பிற்பாடு சீன தேசத்தவர் உள் நுழைந்து இந்த நிறுவனங்களின் இயக்குநர் பதவியைப் பிடித்துக் கொள்வார்கள்.

சில உள்ளூர்வாசிகளை அழைத்து எச்.எஸ்.பி.சி. வங்கியில் கணக்குத் தொடங்க வைப்பது, இணையதளத்திற்குள் நுழையும் வழிமுறைகளை சீனாவின் இந்திய ஊழியர்கள் அவர்களுக்கு கூரியரில் அனுப்புவர். பணம் கொடுத்தல் பற்றிய முக்கிய உத்தரவுகள் அங்கிருந்து வரும். குற்றம்சாட்டப்பட்ட இந்த நிறுவனங்கள் அதே போன்ற இணையதளங்களை இங்கு தொடங்கும் இவற்றை அமெரிக்காவின் கிளவுட்ஃபேர் மூலம் ஹோஸ்ட் செய்யப்படும்.

பெரிய அளவில் இதில் சிலர் பணம் சம்பாதிக்கவும் பலர் பணத்தைக் கோட்டை விட்டு நடுத்தெருவுக்கு வருவதும் நடந்து வருகிறது. புதிய உறுப்பினர்களை ஆசைகாட்டி இழுக்க தரகர்களும் நியமிக்கப்படுவார்கள். இந்த தரகர்கள் மூடுண்ட டெலிகிராம் மற்றும் வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி பேராசை இந்தியர்களை மயக்கி சூதாட்டத்துக்குள் இழுப்பார்கள். புதிய உறுப்பினர்களை வரவேற்க ரகசிய குறிச் சமிக்ஞைகள் இருக்கின்றன. ஸ்பான்சர் செய்யும் உறுப்பினருக்கு கமிஷன்களும் உண்டு. பேடிஎம் மற்றும் கேஷ்ஃப்ரீ ஆகியவை பண வசூலுக்கும் கமிஷன் அளிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

இ-காமர்ஸ் என்ற பெயரில் ஆன்லைன் சூதாட்டத்துக்காக நூற்றுக்கணக்கான வெப்சைட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வெப்சைட்கள் அனைத்தும் தினசரி அடிப்படையில் செயல்படுத்தப் படமாட்டாது. சூதாட்டத்திற்காக பந்தயம் கட்ட சில இணையம் மற்றும் இயக்கப்படும். இதன் தகவல்கள் அவர்களிடையே குழுக்களில் செயலியில் நடைபெறும்.

டோக்பே டெக்னாலஜி நிறுவனத்தின் வங்கிக் கணக்கைச் சோதித்ததில் கடந்த ஆண்டு ரூ.1,268 கோடி ‘கல்லா’ கட்டியிருப்பது தெரியவந்தது. இதில் பேடிஎம் வழியாக ரூ.300 கோடிவந்துள்ளது இதே வழியில் ரூ.600 கோடி பரிவர்த்தனையும் நடந்துள்ளது தெரியவந்தது. மேலும் சீன ஆன்லைன் டேட்டிங் ஆப்களை நடத்தும் இந்திய நிறுவனங்களின் நிழல் நிதிப்பரிவர்த்தனைகளும் அம்பலமாகியுள்ளது. இதே பெயரில் ஹவாலா பரிவர்த்தனைகளும் நடைபெறுவதாக அமலாக்கத்துறை சந்தேகப்படுகிறது.

-சிறப்புச் செய்தியாளர், தி இந்து ஆங்கிலம் நாளிதழ்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x