Published : 29 Aug 2020 08:57 PM
Last Updated : 29 Aug 2020 08:57 PM

செப். 30 வரை ஊரடங்கு; மத்திய அரசுடன் ஆலோசிக்காமல் பொது முடக்கத்தை அமல்படுத்தக் கூடாது; செப்.7 முதல் மெட்ரோ சேவை: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

செப். 30-ம் தேதி வரை கரோனா ஊரடங்கு தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஊரடங்கில் 4-ம் கட்டத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பள்ளி, கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

மத்திய அரசுடன் முன்னரே ஆலோசிக்காமல் கட்டுப்பாடு மண்டலங்களுக்கு வெளியே எந்த ஒரு உள்ளூர் பொது முடக்கத்தையும் (மாநில / மாவட்ட / உள்-வட்ட / மாநகர / கிராம அளவில்) மாநில / யூனியன் பிரதேச அரசுகள் அமல்படுத்தக்கூடாது. மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் 7-ம் தேதியில் இருந்து படிப்படியாக அனுமதிக்கப்படும் ஆகிய முக்கிய அம்சங்கள் இதில் அறிவிக்கப்பட்டுள்ளன.

கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களுக்கு வெளியில் உள்ள பகுதிகளில் முடக்க நீக்கத்துக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.

முடக்கநிலை நீக்கத்தின் நான்காவது கட்டம் (Unlock 4.0) 2020 செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது.

இதன்படி,

* மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் 7-ம் தேதியில் இருந்து படிப்படியாக அனுமதிக்கப்படும்.

* சமூக/ கல்வி / விளையாட்டு / பொழுதுபோக்கு/ கலாச்சார / மத / அரசியல் நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 100 பேர் வரை பங்கேற்கலாம். இது செப்டம்பர் 21-ம் தேதியில் இருந்து அமலுக்கு வரும். இருந்தபோதிலும், கட்டாயமாக முகக் கவசம் அணிதல், தனி நபர் இடைவெளியைக் கடைபிடித்தல், தெர்மல் ஸ்கேனிங் மற்றும் கை கழுவுதல் அல்லது கிருமிநாசினி பயன்படுத்துதல் ஆகிய விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

* திறந்தவெளி அரங்குகளில் நிகழ்ச்சிகள் நடத்த செப்டம்பர் 21-ம் தேதியில் இருந்து அனுமதிக்கப்படும்.

* மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் விரிவான ஆலோசனை செய்ததை அடுத்து, செப்டம்பர் 30 வரையில் மாணவர்களுக்குப் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி மற்றும் பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டிருக்கும். அந்தத் தேதி வரை வழக்கமான வகுப்புகள் நடைபெறாது.

* ஆன்லைன்/ தொலைநிலை கற்றல் முறைகளைத் தொடர அனுமதிக்கலாம், ஊக்குவிக்கலாம். இருந்தபோதிலும், கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களுக்கு வெளியில் உள்ள பகுதிகளில் மட்டும், செப்டம்பர் 21 ஆம் தேதியில் இருந்து பின்வரும் விஷயங்களுக்கு அனுமதி அளிக்கலாம்.

a. ஆன்லைன் கற்பித்தல்/ தொலைவில் இருப்போருக்குக் கலந்தாய்வு மற்றும் அவை தொடர்பான பணிகளுக்கு 50 சதவீதம் வரையில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களை பணிக்கு வரவழைக்க மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் அனுமதிக்கலாம்.

b. கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களுக்கு வெளியில் மட்டும் 9 முதல் 12 -ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கு, தங்கள் விருப்பத்தின் பேரில் நேரில் பள்ளிக்கூடங்களுக்கு வர அனுமதிக்கலாம். அவர்களின் பெற்றோர்/ காப்பாளர் எழுத்துபூர்வமாக ஒப்புதல் அளிப்பதன் அடிப்படையில் மட்டுமே இதை அனுமதிக்க வேண்டும்.

c. தேசியத் தொழில் திறன் மேம்பாட்டுக் கழகம் அல்லது மாநிலத் தொழில் திறன் மேம்பாட்டு அமைப்புகள் அல்லது மத்திய, மாநில அரசுகளின் மற்ற அமைச்சகங்களில் பதிவு செய்துள்ள தேசியத் தொழில் திறன் பயிற்சி நிலையங்கள், ஐ.டி.ஐ.கள், குறுகிய காலப் பயிற்சி மையங்களில் தொழில் திறன் அல்லது தொழில்முனைவோர் பயிற்சி அளிக்க அனுமதிக்கலாம்.

கீழ்க்கண்டவற்றைத் தவிர அனைத்து செயல்களும் கட்டுப்பாடு மண்டலங்களுக்கு வெளியே அனுமதிக்கப்படும்:

(i) திரையரங்குகள், நீச்சல் குளங்கள், அரங்கங்கள் (திறந்தவெளி அரங்கங்கள் தவிர) மற்றும் ஒத்த இடங்கள்

(ii) உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்டதைத் தவிர பயணிகளின் சர்வதேச விமானப் பயணம்

* கட்டுப்பாடு மண்டலங்களுக்கு வெளியே எந்த ஒரு உள்ளூர்ப் பொது முடக்கத்தையும் மாநிலங்கள் அமல்படுத்தக்கூடாது.

* மத்திய அரசுடன் முன்னரே ஆலோசிக்காமல் கட்டுப்பாடு மண்டலங்களுக்கு வெளியே எந்த ஒரு உள்ளூர் பொது முடக்கத்தையும் (மாநில / மாவட்ட / உள்-வட்ட / மாநகர / கிராம அளவில்) மாநில / யூனியன் பிரதேச அரசுகள் அமல்படுத்தக்கூடாது.

* மாநிலங்களுக்கிடையே மற்றும் மாநிலங்களுக்குள்ளும் பயணிக்க எந்தக் கட்டுப்பாடும் இல்லை.

* மக்கள் மற்றும் சரக்குகள் மாநிலங்களுக்கிடையே மற்றும் மாநிலங்களுக்குள் பயணிக்க எந்தக் கட்டுப்பாடும் இருக்காது. இத்தகைய போக்குவரத்துக்கு தனியாக அனுமதி / ஒப்புதல் / மின்-அனுமதி (இ-பெர்மிட்) தேவைப்படாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x