Last Updated : 29 Aug, 2020 04:14 PM

 

Published : 29 Aug 2020 04:14 PM
Last Updated : 29 Aug 2020 04:14 PM

ஃபேஸ்புக் மட்டுமல்ல வாட்ஸ் அப்  கூட ஆளும் பாஜகவுக்கு நெருக்கம்தான்: காங்கிரஸ் பாய்ச்சல்

செய்தியாளர்கள் சந்திப்பில் பவன் கேரா (வலது)

கடந்த 10 தினங்களாக ஆளும் பாஜக அரசுக்கும் ஃபேஸ்புக் சமூகவலைத்தள நிறுவனத்திற்கும் இடையே உள்ள நெருக்கம் பற்றிய செய்திகள் பாஜகவையும் ஃபேஸ்புக் நிறுவனத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது, இந்நிலையில் வாட்ஸ் அப் செயலியும் பாஜகவுக்கு நெருக்கம்தான் என்ற செய்தியும் கூடுதலாக வளையவருகிறது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா தெரிவித்துள்ளார்.

“கடந்த 10 நாட்களாக ஃபேஸ்புக்கிற்கும் ஆளும் பாஜகவுக்கும் உள்ள நெருங்கிய உறவு பற்றி பேசப்பட்டு வருகிறது. புதிய அம்பலப்படுத்தலாக ஒரு பன்னாட்டு ஊடகம் வாட்ஸ் அப் மொபைல் செயலியும் ஆளும் பாஜகவுக்கு நெருக்கம்தான் என்பதை பறைசாற்றியுள்ளது.

அங்கி தாஸ் மட்டுமல்ல, வாட்ஸ் அப் செயலியின் மூத்த நிர்வாகி ஷிவ்நாத் துக்ரலும் வெளிப்படையாகவே ஆளும் பாஜகவின் பக்தர்தான் என்பதை பன்னாட்டு ஊடகம் அம்பலப்படுத்தியுள்ளது. மேலும் அவர் தனது தொழில்பூர்வ நடத்தையிலும் பாரபட்சமாக்ச் செயல்பட கூடியவர் என்பதையும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

2017-ல் துக்ரல் ஃபேஸ்புக்கினால் நியமிக்கப்பட்டார். ஏனெனில் அவர் ‘ஆளும் கட்சிக்கு மிகவும் நெருக்கமானவர்’ என்பதால். அந்த ஊடகம் மேலும் கூறும்போது துக்ரலுக்கும் ஆளும் பாஜகவுக்கும் உள்ள உறவை 2013-ம் ஆண்டுக்கு கொண்டு செல்கிறது. 2014 தேர்தல் பிரச்சாரத்திற்காக ஃபேஸ்புக் மற்றும் இணையதளங்களை பாஜகவின் சிலபல மூத்த நிர்வாகிகளுடன் சேர்ந்து துக்ரல் செயல்படுத்தி வந்தார். அவர்கள் இன்னமும்கூட மத்திய அரசில் முக்கிய பதவிகளில் இருக்கின்றனர்.

அந்த ஊடகத்துக்கு கிடைத்த தகவல்களின் படி தங்களுக்கும் பாஜகவுக்கும் உள்ள தொடர்பை கூடியமட்டும் ரகசியமாக வைத்திருப்பதாகும். 2014-ல்தான் ‘மேரா பரோசா’ என்ற முகநூல் பக்கம் ‘மோடி பரோசா’ என்று மாற்றமடைகிறது. இதில் மோடி ஆதரவும் பாஜக ஆதரவு பொருளடக்கங்கள் பகிரப்பட்டன.

பாஜகவின் வெறுப்பைத் தூண்டும் பேச்சுகள் மீது ஃபேஸ்புக் இன்னமும் கூட நடவடிக்கை எடுக்காததற்கு இதுதான் காரணம். ஃபேஸ்புக்கிற்கு இந்தியா மிகப்பெரிய ஒரு சந்தை, அதனால் ஆளும் கட்சியைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்று செயல்படுகிறது.

அதே போல் வாட்ஸ் அப் என்பது பாஜகவின் தீங்கான, வெறுப்புப் பிரச்சாரத்துக்கு பாஜகவின் ஒரு ஆயுள் ரேகையாகும். உண்மையில் இப்போது தவறான தகவல்களின் மையநீரோட்டமாக மாறியுள்ளது. 40 கோடி இந்தியர்கள் வாட்ஸ் அப்-ஐ வெறும் தொடர்புச் சாதனமாக பயன்படுத்தாமல் பேமெண்ட்களை செலுத்தும் ஒரு நடைமேடையாகவும் பயன்படுத்த வேண்டும் என்ற திட்டம் கொண்டுள்ளது. பல பில்லியன்டாலர்கள் கொண்ட இத்திட்டத்துக்கு மோடி அரசின் அனுமதிகள் தேவை. ஆகவே ஒரேயொரு அரசியல் கட்சிக் கட்டுப்படுத்தும் ஒரு செயலியை 40 கோடி இந்தியர்கள் நம்ப முடியுமா என்பதே இப்போதைய கேள்வி. தனிநபர்களின் வங்கி விவரங்கள், சுயவிவரங்கள், பண நடவடிக்கை விவரங்கள் ஆகிய தரவுகளை பாஜகவுக்கு வழங்காது அல்லது துஷ்பிரயோகம் செய்யாது என்பதற்கான உத்தரவாதம் இருக்கிறதா?

ஆகவே வாட்ஸ் அப், ஃபேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களுக்கும் ஆளும் கட்சிக்கும் உள்ள பிணைப்பை முழு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். வாக்காளர் கருத்தை அது எப்படி திரிக்கிறது, அல்லது வளைக்கிறது, வெறுப்புப் பேச்சை எப்படி அனுமதிக்கிறது, பொய்ச்செய்திகளை எப்படி சவுகரியமாக மறந்து விடுகிறது ஆகியவை இந்த விசாரணையில் சேர்க்கப்பட வேண்டும், இவ்வாறு தெரிவித்துள்ளார் பவன் கேரா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x