

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 76 ஆயிரத்து 472 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதன் மூலம் தொற்று எண்ணிக்கை 34 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 76 ஆயிரத்து 472 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 34 லட்சத்து 63 ஆயிரத்து 972 ஆக பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 7-ம் தேதி 20 லட்சத்தையும், கடந்த 23-ம் தேதி 30 லட்சத்தையும் எட்டியது குறிப்பிடத்தக்கது.
இதில் நம்பிக்கையளிக்கும் விதமாக, கரோனாவிலிருந்து இதுவரை 26 லட்சத்து 48 ஆயிரத்து 998 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் நலம்பெற்றவர்கள் 76.47 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கரோனாவில் சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 7 லட்சத்து 52 ஆயிரத்து 424 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 21.72 சதவீதம் மட்டும்தான்.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 1,021 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டு மொத்த உயிரிழப்பு 62 ஆயிரத்து 550 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் ஒட்டுமொத்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது, உயிரிழப்பு சதவீதம் 1.81 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிபட்சமாக மகாராஷ்டிராவில் 331 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் 131 பேர், தமிழகத்தில் 102 பேர், ஆந்திராவில் 81 பேர், உத்தரப்பிரதேசத்தில் 77 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்கத்தில் 56 பேர், பஞ்சாப்பில் 51 பேர், பிஹார்,டெல்லியில் தலா 20 பேர், மத்தியப்பிரதேசத்தில் 17 பேர், ஹரியாணாவில் 15 பேர், குஜராத்தில்14 பேர், ராஜஸ்தானில் 12 பேர், உத்தரகாண்டில் 11 பேர் உயிரிழந்தனர்.
புதுச்சேரி, தெலங்கானாவில் தலா 9 பேர், அசாம், ஜார்க்கண்ட், ஒடிசாவில் தலா 8 பே்ர, ஜம்மு காஷ்மீர், கேரளாவில் தலா 7 பேர், சத்தீஸ்கரில் 6 பேர், திரிபுராவில் 5 பேர், கோவாவில் 4 பேர், சண்டிகர், மணிப்பூர், மேகாலயாவில் தலா 2 பேர், லடாக்கில் ஒருவர் உயிரிழந்தனர்.
ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை 4 கோடியே 4லட்சத்து 6 ஆயிரத்து 609 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 9 லட்சத்து 28 ஆயிரத்து 761 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று 331 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 23 ஆயிரத்து 775 ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 81ஆயிரத்து 050 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று 102 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 7,050 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் 52 ஆயிரத்து 506 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லியில் 13 ஆயிரத்து 550 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,389 ஆக அதிகரித்துள்ளது.
குஜராத்தில் 14 ஆயிரத்து 951 பேர் சிகிச்சையில் உள்ளனர். 14 பேர் நேற்று உயிரிழந்ததையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 2,976 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 86,366 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று 136 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 5,386 ஆக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலத்தில் 23,176 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பலி எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது.
ஆந்திராவில் 96 ஆயிரத்து 191 பேர் சிகிச்சையில் உள்ளனர். 81 பேர் நேற்று பலியானதையடுத்து ஒட்டுமொத்த உயிரிழப்பு 3,714 ஆக அதிரித்துள்ளது.
தெலங்கானாவில் 30 ஆயிரத்து 8 பேர் சிகிச்சையில் உள்ளனர். அங்கு நேற்று மட்டும் 9 பேர் பலியானதையடுத்து, உயிரிழப்பு 808 ஆக அதிகரித்துள்ளது''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது