Last Updated : 28 Aug, 2020 08:25 PM

 

Published : 28 Aug 2020 08:25 PM
Last Updated : 28 Aug 2020 08:25 PM

ஜம்மு காஷ்மீரில் கடும் துப்பாக்கிச் சண்டை; 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ஒருவர் சரண் - பாதுகாப்புப் படை அதிரடி

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் இன்று தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு தீவிரவாதி சரணடைந்தார்.

சோபியான் மாவட்டத்தில் உள்ள கான்மோ ஊராட்சித் தலைவர் நிசார் அகமது பாட் (வயது 45) கடந்த 10 நாட்களுக்கு முன் காணாமல் போனார். இந்த ஊராட்சித் தலைவர் பாஜகவைச் சேர்ந்தவர். இது தொடர்பாக அகமது பாட் குடும்பத்தினர் போலீஸிடம் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில் சோபியான் மாவட்டத்தில் உள்ள டான்கம் கிராமத்தைச் சேர்ந்த சிலர் தங்கள் கிராமத்தில் உள்ள ஒரு பழத் தோட்டத்தில் அடையாளம் தெரியாத ஒருவரின் உடல் புதைக்கப்பட்டு இருப்பது குறித்து போலீஸுக்குத் தகவல் அளித்தனர். அந்த உடலைக் கைப்பற்றி போலீஸார் ஆய்வு நடத்தியபோது அது கடத்தப்பட்ட ஊராட்சித் தலைவர் அகமது பாட்டின் உடல் எனத் தெரியவந்தது.

இதற்கிடையே கிலூரா பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, இன்று அதிரடியாக நுழைந்து போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் தேடுதலில் ஈடுபட்டபோது அங்கிருந்த தீவிரவாதிகள் போலீஸாரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர்

இருதரப்புக்கும் இடையே நடந்த கடும் சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒருவர் சரணடைந்தார்.

இதுகுறித்து ஸ்ரீநகரில் உள்ள பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கர்னல் ராஜேஷ் கலியா கூறுகையில், “ தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள். ஒரு தீவிரவாதி சரணடைந்தார். அவர்களிடம் இருந்து 2 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், 3 கைத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன” எனத் தெரிவித்தார்.

காஷ்மீர் போலீஸ் ஐஜி விஜய குமார்

காஷ்மீர் போலீஸ் ஐஜி விஜயகுமார் கூறுகையில், “அல் பதார் தீவிரவாத அமைப்பின் மாவட்டத் தலைவர் சகூர் பரே, மற்றொரு தீவிரவாதி சுகைல் பாட் ஆகிய இருவரும் இன்று துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டனர். சமீபத்தில் ஊராட்சித் தலைவர் ஒருவரைக் கடத்திக் கொலை செய்த விவகாரத்தில் இருவரும் தேடப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் சகூர் அகமது பரே காஷ்மீர் போலீஸாகப் பணிபுரிந்தவர். போலீஸிடம் இருந்து 4 ஏகே 47 ரகத் துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்று தீவிரவாத அமைப்பில் சேர்ந்தார். அதன்பின் அல் பதார் தீவிரவாத அமைப்பின் மாவட்டத் தலைவராக சகூர் அகமது பரே உருவாகினார். 10-க்கும் மேற்பட்ட இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாதிகளாக அல் பதார் அமைப்பு மாற்றியது. இதில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்தத் துப்பாக்கிச் சண்டையில் போலீஸார், பாதுகாப்புப் படையினர் யாரும் காயம் அடையவில்லை. சரணடைந்த தீவிரவாதியிடம் விசாரணை நடந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x