Last Updated : 28 Aug, 2020 11:54 AM

 

Published : 28 Aug 2020 11:54 AM
Last Updated : 28 Aug 2020 11:54 AM

பல்கலைக்கழக, கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகளை செப்.30க்குள் நடத்த வேண்டும்; தேர்வில்லாமல் மாணவர்களை தேர்ச்சிபெற்றதாக அறிவிக்ககூடாது:  உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி

பல்கலைக்கழகம், கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு தேர்வுகள் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நடத்தப்பட வேண்டும். தேர்வில்லாமல் மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கூடாது என்று ஜூலை 6-ம் தேதி யுஜிசி பிறப்பித்த உத்தரவு செல்லும் என அறிவித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

கரோனா வைரஸ் பரவத் தொடங்கியதையடுத்து, மார்ச் மாதத்திலிருந்து நாட்டில் அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர்களைத் தேர்வு பெற்றதாக அறிவித்து, கரோனா காலத்தில் தேர்வுகளை நடத்த முடியாமல் ரத்து செய்வதாகத் தெரிவித்தன.

இந்தச் சூழலில் மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், பல்கலைக்கழக, கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று அறிவித்தது.

அதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் பல்கலைக்கழக மற்றும் கல்லூரித் தேர்வுகள் நடத்தப்படும் என்று அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் யுஜிசி கடந்த ஜூலை 6-ம் தேதி வெளியிட்டது.

மாணவர்களுக்கு ஆன்லைன், அல்லது நேரடியாக வந்து தேர்வுகளை எழுதலாம். அல்லது இரு முறையையும் கலந்துகூட தேர்வுகளை நடத்தலாம் ஆனால், தேர்வுகளை மட்டும் ரத்து செய்ய முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது.

ஆனால், கரோனா வைரஸ் காலத்தில் பல்கலைக்கழக, கல்லூரி இறுதித் தேர்வுகளை நடத்துவது இயலாதது, தேர்வுகளை நடத்தும் முடிவை மாநில அரசுகளிடமே தர வேண்டும் எனக் கோரி மத்திய அரசுக்கு தமிழகம், டெல்லி, ஒடிசா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா,பஞ்சாப் மாநிலங்கள் கோரின. இதில் டெல்லி, மகாராஷ்டிரா அரசுகள் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்வதாக அறிவித்தன.

இருப்பினும், யுஜிசி உத்தரவுக்கு எதிராக சிவசேனா கட்சியின் இளைஞர் பிரிவான யுவசேனா சார்பிலும், பல்ேவறு மாணவர்கள் தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையின் போது, டெல்லி, மகாரஷ்டிரா அரசுகள் பல்கலைக்கழக, கல்லூரி இறுதிசெமஸ்டர் தேர்வை ரத்து செய்த அறிவிப்பு யுஜிசி விதிமுறைக்கு எதிரானது என்று யுஜிசி தரப்பில் வாதிடப்பட்டது.

அதுமட்டுலமலாமல், நாட்டில் உள்ள 800 பல்கலைக்கழகங்களில் 209 பல்கலைக்கழகங்கள், இறுதி ஆண்டுசெமஸ்டர் தேர்வுகளை நடத்தி முடித்துவிட்டன, 390 பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை நடத்தும் முயற்சியில் உள்ளன என்று தெரிவித்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு விசாரணை முடித்து தீர்ப்பை கடந்த 18-ம் தேதி ஒத்திவைத்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கல்லூரிகள், பல்கலைக்கழங்களில் பயிலும் மாணவர்களுக்கு இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் யுஜிசி கடந்த ஜூலை 6-ம் தேதி பிறப்பித்த உத்தரவுப்படி வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நடத்தப்பட வேண்டும்.

மாநிலங்களும், பல்கலைக்கழகங்களும் எந்த மாணவர்களையும் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது. செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏதும் மாநிலங்களில் நிலவினால், அதுகுறித்து அந்தந்த மாநில அரசுகள் பல்கலைக்கழக மானியக் குழுவிடம் பேசி, ஆலோசித்து புதிய தேதிகள் குறித்து முடிவு செய்து கொள்ளலாம்.

ஆனால், இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்தாமல் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவதோ, தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பதோ கூடாது. கடந்த ஜூலை 6-ம் தேதி பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்ட அனைத்து உத்தரவுகளும் செல்லுபடியாகும்

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x