Published : 27 Aug 2020 03:27 PM
Last Updated : 27 Aug 2020 03:27 PM

நீட் என்பது மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வா? - காங்கிரஸுக்கு பாஜக கேள்வி

மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நரோத்தம் மிஸ்ரா நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் மூன்றாம் அல்லது நான்காம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் அல்ல, கரோனாவை காட்டி எதிர்க்கட்சிகள் பயமுறுத்த வேண்டாம் என மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நரோத்தம் மிஸ்ரா கூறியுள்ளார்.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வான நீட் ஜூலை 26-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது. எனினும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மீண்டும் நுழைவுத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.

நீட் தேர்வு, செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறுகிறது. கரோனா காலத்திலும் தேர்வு திட்டமிட்ட தேதியில் கண்டிப்பாக நடைபெறும் என்று நீட் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்குத் தேசிய அளவில் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

எனினும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நீட் தேர்வை மீண்டும் ஒத்தி வைக்க வேண்டும் என பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக பாஜக ஆளாத மாநில முதல்வர்களின் கூட்டத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி நேற்று கூட்டினார். காணொலி வாயிலாக நடந்த இந்தக் கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் காங்கிரஸ் ஆளும் 4 மாநிலங்களின் முதல்வர்களும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் நீட் தேர்வை ஒத்திவைக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தை நாட முடிவெடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் நாளை போராட்டம் நடத்த இருக்கிறது.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நரோத்தம் மிஸ்ரா எதிர்கட்சிகளுக்கு பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில் ‘‘நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வு அவசியம் நடத்தப்பட வேண்டும். நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் மூன்றாம் அல்லது நான்காம் வகுப்பு தேர்வுகள் அல்ல. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் தேசத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். இந்த தேர்வுகள் அவசியம். எனவே, இதை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்யக் கூடாது.’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x