

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் சிறுநீரக செயல்பாடுகளில் சற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கடந்த 10-ம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதன் பின்னர் அவரது உடல்நிலை மோசமானது. மேலும், அவருக்கு கரோனா தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி, சில நாட்களுக்கு பிறகு கோமா நிலைக்கு சென்றார். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் கவலைக்கிடமாகி வந்தது. இதனிடையே, அவர் ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றதாக சில
நாட்களுக்கு முன்பு மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதவிர, அவருக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், டெல்லி ராணுவ மருத்துவமனை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரணாப் முகர்ஜியின் சிறுநீரக செயல்பாடுகளில் சற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் அதே நேரத்தில், அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசமும் வழங்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.