நீட் தேர்வை ஒத்தி வைக்க மத்திய அரசு மறுத்தால் மாநில முதல்வர்கள் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும்: மம்தா பானர்ஜி ஆவேசம்

நீட் தேர்வை ஒத்தி வைக்க மத்திய அரசு மறுத்தால் மாநில முதல்வர்கள் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும்: மம்தா பானர்ஜி ஆவேசம்
Updated on
1 min read

நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க மத்திய அரசு முன்வராவிட்டால் மாநில முதல்வர்கள் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வான நீட் ஜூலை 26-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது. எனினும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மீண்டும் நுழைவுத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.

நீட் தேர்வு, செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறுகிறது. கரோனா காலத்திலும் தேர்வு திட்டமிட்ட தேதியில் கண்டிப்பாக நடைபெறும் என்று நீட் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்குத் தேசிய அளவில் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் விண்ணப்பித்துள்ளனர். எனினும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நீட் தேர்வை மீண்டும் ஒத்தி வைக்க வேண்டும் என பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

இந்தநிலையில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக பாஜக ஆளாத மாநில முதல்வர்களின் கூட்டத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா கூட்டினார். காணொலி வாயிலாக நடந்த இந்தக் கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் காங்கிரஸ் ஆளும் 4 மாநிலங்களின் முதல்வர்களும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் நீட் தேர்வு மட்டுமின்றி, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி ‘‘மாணவர்கள் தேர்வு எழுதுவதற்குரிய சூழல் வரும் வரை நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு தேர்வு நடத்துவதில் விடாப்பிடியாக உள்ளது. எனவே அனைத்து மாநில அரசுகளும் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும்.’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in