Published : 26 Aug 2020 01:15 PM
Last Updated : 26 Aug 2020 01:15 PM

273 மருத்துவர்கள் கரோனாவுக்கு மரணமடைந்துள்ளனர், மத்திய அரசின் உதவி இன்னமும் கிடைக்கவில்லை: இந்திய மருத்துவச் சங்கம் குற்றச்சாட்டு

கரோனா வைரஸ் சிகிச்சையில் முன்னிலையிலிருந்து சிகிச்சை அளித்ததால் கரோனா பாதிப்பி 273 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர். ஆனால் மத்திய அரசின் உதவிகள் எதுவும் இவர்களது குடும்பத்தினருக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று இந்திய மருத்துவச் சங்கத்தின் பொது செயலாளர் டாக்டர் ஆர்.வி.அசோகன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இது தொடர்பாக மருத்துவர்கள் சங்கம் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியிருக்கிறது, அவரிடமிருந்து இன்னமும் பதில் வரவில்லை.

மத்திய அரசின் இந்த உதவித்திட்டத்தில் தனியார் மருத்துவர்கள் சேர்க்கப்படவில்லை. இதையும் பிரதமர் மோடி கவனத்துக்குக் கொண்டு சென்றோம்.

கோவிட்19 சிகிச்சையில் தங்கள் உயிரையும் மறந்து கடமையாற்றிய அரசு மருத்துவர்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் அளிக்கப்படுகிறது, இந்தப் பயனை தனியார் மருத்துவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும்.

கரோனா பெரும்தொற்று மக்கள் பிரிவில் எந்த ஒரு வேறுபாடும் காட்டுவதில்லை எனும்போது சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடத்தில் ஏன் வேறுபாடு காட்ட வேண்டும்.

ஆகஸ்ட் 8ம் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அப்போது196 மருத்துவர்கள் மரணமடைந்திருந்தனர். கடந்த இரு வாரங்களில் 273 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும் மத்திய அரசிடமிருந்து இன்னும் பதில் வரவில்லை, என்றார் டாக்டர் அசோகன்.

ஐஎம்ஏ திரட்டிய தகவல்களின் படி இந்தியா முழுதும் சுமார் 1096 மருத்துவர்கள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவர்களின் மரண விகிதம் இப்போது 15% ஆக உள்ளது. அரசு மருத்துவர்கள் மரண விகிதம் 8% ஆக உள்ளது என்று ஐஎம்ஏ கூறுகிறது.

மரணமடைந்த 273 மருத்துவர்களில் 226 பேர் 50 வயதுக்கும் அதிகமானவர்கள். இளவயது மருத்துவர்கள் அதிகம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் வயதான மருத்துவர்களின் இறப்பு அதிகரிக்கிறது என்கிறார் டாக்டர் அசோகன்.

இந்த கரோனா காலத்தை நாம் நம் நாட்டின் மருத்துவ, சுகாதார நிலையை மேம்படுத்த பயன்படுத்த வேண்டும். நாட்டின் ஜிடிபியில் 5-6% சுகாதாரத்துக்கு ஒதுக்க வேண்டும். பொதுச்சுகாதார நிறுவனங்களே நாட்டைக் கரோனாவுக்கு எதிராகப் போராட பெரிய பங்களிப்பு செய்துள்ளது, இல்லையெனில் மற்ற நாடுகளை போல் நாமும் வீழ்ந்திருப்போம், என்று கூறுகிறார் ஐ.எம்.ஏ. பொதுச் செயலாளர் டாக்டர் அசோகன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x