Last Updated : 25 Aug, 2020 09:38 AM

 

Published : 25 Aug 2020 09:38 AM
Last Updated : 25 Aug 2020 09:38 AM

சோனியா காந்திக்குக் கடிதம் எழுதிய 23 காங். மூத்த தலைவர்கள்: காரியக் கமிட்டி கூட்டம் முடிந்தபின் கூட்டாகச் சந்திப்பு 

குலாம் நபி ஆசாத் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற ஆனந்த் சர்மா: படம் | ஏஎன்ஐ.

புதுடெல்லி

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு, 'தலைமையில் மாற்றம் தேவை' எனக் கோரி கடிதம் எழுதியிருந்த கட்சியின் 23 மூத்த தலைவர்கள், காரியக் கமிட்டி கூட்டம் நேற்று முடிந்தவுடன் கூட்டாகச் சந்தித்தனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்தபின், காரியக் கமிட்டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.

ஓராண்டுக்கும் மேலாக இடைக்காலத் தலைவர் தொடர்வது கட்சிக்குள் நிலையான தலைமை கோருபவர்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளது.

இது தொடர்பாக சோனியா காந்திக்கு மூத்த தலைவர் 23 பேர் கடிதம் எழுதி தலைமை குறித்து உறுதியான முடிவு எடுக்க வலியுறுத்தியுள்ளனர். மீண்டும் ராகுல் காந்தி தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று சிலரும், அடிப்படை மாற்றங்கள் தேவை எனவும் இரு தரப்பிலும் கோரிக்கை வலுத்து வருகிறது.

இதையடுத்து, நேற்று காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் நடந்தது. 7 மணிநேரம் நீண்ட விவாதங்கள் நடந்தபின், இடைக்காலத் தலைவராக சோனியா காந்தியே நீடிப்பார் என்றும், சோனியா, ராகுல் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அடுத்தகட்டத் தலைவரைத் தேடுவதற்கான பணிகளைத் தொடங்கலாம், அமைப்புரீதியான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன.

ஆனால், செயற்குழுக் கூட்டத்தில் தலைவர்களுக்கு இடையே எந்த மாதிரியான கருத்துப் பரிமாற்றங்கள் இருந்தன என்பது குறித்து ஊடகங்களிடம் காங்.கட்சித் தலைவர்கள் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதி, வலுவான, முழுமையான தலைவர் தேவை என கட்சியின் 23 முக்கிய நிர்வாகிகள் கோரியிருந்தனர். அந்த வகையில் அந்த 23 தலைவர்களும் நேற்று காரியக் கமிட்டி கூட்டம் முடிந்ததும் குலாம் நபி ஆசாத் வீட்டில் சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, முகுல் வாஸ்னிக், மணிஷ் திவாரி, சசிதரூர், கபில் சிபல் ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர். இவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் உட்கட்சிப் பிரச்சினை குறித்தும் காரியக் கமிட்டி கூட்டத்தில் விவாதித்கப்பட்டது.

இதைப் பொதுவெளிக்குக் கொண்டுவருவதோ, அல்லது ஊடகங்களிடம் கூறுவதோ முறையில்லை. கட்சியின் நலனுக்காகவும், ஒழுக்கக் கட்டுப்பாட்டுக்காகவும் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன. இதைக் கூற முடியாது என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

சோனியா காந்திக்குக் கடிதம் எழுதிய தலைவர்கள் குலாம் நபி ஆசாத், கபில் சிபல், சசி தரூர், ஆனந்த் சர்மா, மணிஷ் திவாரி, பி.ஜே.குரியன், ரேணுகா சவுத்ரி, மிலிந்த் தியோரா, அஜய் சிங் ஆகிய மூத்த தலைவர்களும், எம்.பி. விவேக் தங்கா, செயற்குழு உறுப்பினர்கள் முகுல் வாஸ்னிக், ஜிதின் பிரசாதா, பூபேந்திரசிங் ஹூடா, ராஜேந்திர கவுர் பாட்டல், எம்.வீரப்ப மொய்லி, பிரிதிவிராஜ் சவான் ஆகியோரும் கடிதம் எழுதினர். ராஜ் பப்பார், அரவிந்தர் சிங் , கவுல் சிங், அகிலேஷ் சிங், குல்தீப் சர்மா, யோகானந்த் சாஸ்திரி, சந்தீப் தீட்சித் ஆகியோரும் கடிதம் எழுதினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x